பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பதிற்றுப்பத்து தெளிவுரை


விளக்கம் : உதியஞ் சேரலின் சிறப்புக்கள் மூன்று. அவை, ‘மன்னிய பெரும்புகழ், மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசு’ என்பன: மூவேந்தரும் வேளிர்குடியிற் பெண் கொள்ளல் பண்டைய மரபு. இது, வேண்மாள் நல்லினியை இவன் தேவியாகக் கொண்டதாலும் விளங்கும். ‘ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ என இவ் இமையவரம்பனின் வடபுல வெற்றியைப் பரணர் பெருமானும் வியந்து போற்றுவர் - (அகம், 396). ‘தமிழகம்’ எனத் தமிழ் வழங்கிய பெருநாடு பொதுப் பெயராற் குறிக்கப்படுவதனை, ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்பதும் காட்டும், ‘வையக வரைப்பின் தமிழகம்’ எனக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரும் புறப்பாட்டிற் கூறுவர்.

‘பேரிசை மரபின் ஆரியர்’ எனவே, அதுகாலை வட புலத்தே ஆரிய மன்னருட் சிலர் பேரரசர்களாகவும் புகழுடன் விளங்கினர் எனலாம். இவனால் வெற்றிகொள்ளப் பெற்றவர் வடபுலப் பேரரசர்களான நந்தர்கள் எனக் கருதுதலும் பொருந்தும். யவனரையும் இவன் வெற்றி கொண்டான் என்பதனால், இவனுடைய வடபுலப் போர்ச் செலவு வடமேற்கு எல்லைப்புறம் வரையிலும் சென்றது என்பதும் அறியப்படும்.

‘ஆரியர் வணக்கி’ என்றது, அவர் தோற்றுத் திறை செலுத்திப் பணிய, அவரைத் தன் மேலாட்சியை ஏற்று மீள்வும் தம் நாட்டை ஆளச் செய்தனன் என்பதாம். ‘யவனரைச் சிறையிட்டுக் கொணர்ந்தான்’ என்பது, அவர் இங்கே உரிமைநாடு ஏதுமற்ற வேற்று நாட்டாராயினதாலும், நயனில் வன்சொல் பல தன்பாற் கூறியதாலும் என்று கொள்க.

குமட்டூர்க் கண்ணனார் அந்தணராதலை அவர்க்குப் பிரமதாயமாக நிலம் வழங்கின. இச் செய்தியால் அறியலாம். அந் நாளைய அந்தணருள்ளும் சிலர் சிறந்த தமிழ்ப் பற்றினராயும், தமிழ்ப் புலவர்களாயும் விளங்கினர் என்பதும் இதனால் அறியப்படும். ஆரியரை வென்று வணக்கியதும், யவனரைப் போரிற் பணியச் செய்ததும் செயற்கருஞ் செயல்கள் என்பதும் இதனாலே விளங்கும். முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டில் வருவதனுள் பாகங்கொடுத்தான் என்றதால், இவனது இருபதாவது ஆட்சியாண்டில் இப்பாட்டுக்கள் பாடப்பெற்றன எனக் கொள்ளலாம்.