பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

பதிற்றுப்பத்து தெளிவுரை


களிறுகடைஇய தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்லலைத்த தோள்
வில்லலைத்த நல்வலத்து 5

வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ்செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த

வலம்படு வான்கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதல் 15

புரையோள் கணவ! பூண்கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற
வேள்வியிற் கடவுள் அருத்தினை! கேள்வி
உயர்நிலை உலகத் தையரின் புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20

இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்!
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதோறும் துவன்றும் 25
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாக! நீ வாழும் நாளே!

தெளிவுரை: களிறுகளைச் செலுத்திய கால்களையும், விரையச் செலுத்துதற்பொருட்டுக் குதிரைகளை வருத்திய காலின் ஓரங்களையும், பகைவரது போர்கெடுத்தற்குக் காரணமான வேலினாற் பெற்ற வெற்றியையும், உலக்கல்லை வருத்திய தோள்களையும், வில்லாற் பகைவரை வருத்திய நல்ல வெற்றியையும் உடையோனே!