பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டாம் பத்து

263


வெள்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுடன் ஆடல் யாவணது அவர்க்கே

தெளிவுரை: பலவாகிய வேற்படை வீரர்களோடு, பொன்மாலை யணிந்த போர்க்களிறுகளையும், விரையச் செல்லும் தேர்களையும் உடையனான பொறையனே! நீதான் பெரிய புலியைக் கொன்றுவிட்டு, அதனையடுத்துப் பெரிய களிற்றையும் தாக்கிக் கொல்லும் வரிகளையுடைய வலிய சிங்கத்தினை ஒப்பாவாய்.

இருபெரு வேந்தராகிய சோழபாண்டியரும், வேளிர்குலத் தலைவர்களும், மற்றும் பிற குடித்தலைவர்களும் நின் திருவடிக் கீழ்ப் பணிந்து, நின் ஆணையின்படியே நடவாராயின்-

நெல்வளத்தால் மிகுதிப்பட்டதாகியும், அறுக்கலுற்ற கரும்பின் இனிய பாகமாகிய புதுவளத்தினை வருவார்க்கெல்லாம் அளவின்றிக் கொடுத்திருப்பதுமாகிய, வளம்மிகுந்த ஊர்களைக் கொண்டவான அவர் நாடுகள் எல்லாம் தம் மென்புலத் தன்மைகெட்டு வன்புலத் தன்மையைத் தழுவிவிடுமே! மருதப்பகுதியாகிய மென்புலப் பகுதிகள் தோறும் அரிய போர்ப்பறைகளைக் கொண்டோராகிய போர்த்தொழிலோர், அவ்வவ்விடங்களைக் காப்பவருடன் அங்கங்கே சிறுசிறு போர்களைச் செய்தபடியிருப்பர். அங்ஙனம் போரிட்டுப் பெற்ற பொருளைக் கள்ளுக் கடைகளையுடைய தெருவிடத்தே சென்று தாம் உண்ணும் கள்ளுக்குரிய சிறந்த விலையாகவும் தருவர். உழுது வெள்வரகு உணவையே கொள்ளும் வலிய காட்டுநிலப் பகுதிகட்குச் சென்று தங்கியிருத்தலையும் அப்பகைவர் அதன்பின் செய்பவராவர். செந்நெல் அரிசியாலான உணவினை உண்டறியாதாராகிய நிலையினையும் அடைவர். இத்தகைய நிலைமையை அடைந்துவிட்ட அவர்கட்குப் புலவர்களாற் பாடுதற்கு அமைந்த சிறந்த ஊர்களையுடையவான தங்கள் நாட்டினை ஒருங்கே ஆள்வதென்பதும் எவ்வாறுதான் இனி இயலுமோ?

சொற்பொருளும் விளக்கமும்: பணிந்து போகாத பகையரசர் தம்முடைய வளநாட்டை இழந்தவராக, எஞ்சிய தம்முடைய படைமறவருடன் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்துவாழும் புல்லிய வாழ்க்கையினராகிக் கழிவர் என்