பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பதிற்றுப்பத்து தெளிவுரை


‘ஆரியர் அலறத் தாக்கிப், பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ எனப் பரணரும் (அகம் 396), ‘முந்நீர் ஒட்டிக் கடம்பெறிந்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து’ என மாமூலனாரும் (அகம் 127) குறிப்பிடுவன, இவனது இவ் வெற்றிப் புகழ்ச் செயல்கள் மெய்யாதலையே சான்று கூறி மேலும் உறுதிப்படுத்துவனவாகும்; இவன் புகழ், இதனால் எங்கணும் பரவிய பெரும் புகழ் ஆதலையும் இவை காட்டும்.

12. மறம் வீங்கு பல்புகழ்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. இதனாற் சொல்லியது; சேரலாதனின் வென்றிச் சிறப்பும்; திருவோலக்கத்தின் சிறப்பும்.

[மன்னர்க்குப் பிறபிற வழிகளானே வந்தடையும் புகழினுங் காட்டில், மறமேம்பாட்டாலே வந்தடையும் புகழே மிகமிகச் சிறப்புடையதாகும். இதனை வலியுறுத்தி உரைப்பதே போன்று அமைந்த சொற்றொடர் நயத்தாலே, இப் பாட்டிற்கு ‘மறம் வீங்கு பல்புகழ்’ என்பதைப் பெயராக அமைத்தனர்.]

வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!
நாரணி எருத்தின் வாரல் வள்ளுகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான் 5

தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்க் தாங்கு
முரசமுழங்கு நெடுநகர் அர்சுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிது நின் செல்வங் கேட்டொறும்
காணடல் விருப்பொடு கமழுங் குளவி 10

வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை
அண்ணல் மழகளிறு அரிஞிமிறு ஒப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி