பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

33

விடங்களிலே, முறுக்கிய காய்களோடுங் கூடிய விடத்தேரை மரங்களோடு, கரிய உடைமரங்களும் நீண்டு வளரத் தொடங்கி விட்டனவே! மேலும், முனை பிளவுபட்ட தலை மயிரைக் கொண்ட பேய்ம்மகள், ‘கழுது’ என்னும் பேயின் மேல் ஏறிக்கொண்டு, அவ்விடங்களிலே சுற்றித் திரிபவளும் ஆயினளே! விளைநிலங்கள் எல்லாமும் நெருஞ்சிச்செடி பரந்து செறிந்துகிடக்கும் பாழ்பட்ட இடங்களாகவும், புழுதி பட்ட பாழிடங்களாகவும் முற்றவும் மாறிப் போயினவே!

பூந்தாதாகிய எருவை இழந்தனவும், மக்கள் வந்து சேர்ந்து ஒன்றுகூடுவதாலே எழும் ஆரவாரத்தை இழந்தனவும் ஆயின, அவ் ஊர் மன்றங்கள்! வேறு புகலிடம் அற்றோரான சிலர், தம் உள்ளத்து எழுச்சி அழிந்த நிலையினராக, அம் மன்றங்களுக்கேனும் செல்லக் கருதுவர். அப்படிச் செல்லக் கருதும் அச் சிலரது எஞ்சியுள்ள மனவலிமையையும் கெடச்செய்து, மற்றும் செல்லலாம் எனக் கருதுவாரது மனத்தையும் நடுக்கமுறச் செய்யும் கொடிய பாழிடங்களாக அவை எல்லாமும் உருமாறிப் போயினவே!

நின் நாட்டகத்தேயோ -

பெரும் காட்டிடம் எல்லாம் கடவுள்களுக்குரிய கோயில்கள் விளங்கும் புண்ணியத் தலங்கள் ஆயின! சிறுகாட்டிடம் எல்லாம், ஒளிகொண்ட அணிகலன்களை அணிந்தாரான தத்தம் இளமகளிரோடுங் கூடியவராக, நின் படைமறவர்கள் ஆடிக்களித்து இன்புறுகின்ற படைநிலைகள் ஆயின! காடும் புறவும் அல்லாத பெருவழிகளும், ஆறலைக்கும் கள்வரும் பிற இடையூறுகளும் அற்றவாய், வழிநடப்பார் அச்சமின்றிச் செல்லுவதற்கு ஏற்றவையாக உள்ளன!

அஃதன்றியும் -

தானியங்களைக் கொண்டு விற்கும் வாணிகரது தொழில்கள் முட்டுப்பாடு இல்லாதே நடைபெறுமாறு, அவர்தம் குடும்பங்களையும் நீதான் காத்து வருகின்றன! தமக்கு உட்பட்ட வரிசையாளரைக் காக்கும் காணியாட்சியாளராகிய வேளாளரது சுற்றங்களையும் நன்கு பேணிக் காத்து வருகின்றன!

நின் ஆட்சியது நலத்தினாலே, செவ்வாய் சென்றதன் பக்கத்திலே சுக்கிரன் செல்லாதபடியாகவும் செய்து வளப்படுத்தி வருகின்றன. அதனாலே, மழையும் விரும்பும் பகுதி

ப.-3