பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

35

கூறி விற்போர். குடிபுறந்தருநர் - காணியாளர். வரிசையாளர் - அவரிடம் வாரத்துக்கு நிலத்தைப் பெற்றுப் பயிரிடும் உழவர் குடியினர். புலத்து - இடத்து. பாரம் - குடும்பம்; ‘பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி’ எனப் புறப்பாட்டினும் வரும் (புறம். 35). அழல் - செவ்வாய். மழைக் கோளான சுக்கிரனோடு செவ்வாய் ஒன்று சேரின் நாட்டிலே மழைவளம் திரிந்து வறட்சியுண்டாகும் என்பர்.

விளக்கம் : ‘மூதா ஆம்பல் ஆர்கவும்’ என்றது, பெருக ஆம்பல்சூடிக் களித்தாடும் இளமகளிரைக் கொண்ட ஊர்கள் என, அவற்றின் இன்பச்செழுமை கூறியதாம். ‘கூற்று அடூஉ நின்ற யாக்கை’ யானது கணத்துக்குக்கணம் தானே கெட்டு அழியுமாறுபோலச் சேரலாதனாலே தலைவர்களை இழந்துவிட்ட பகைப்புலங்களும் நாளுக்குநாள் தாமே தம் தன்மையிற் கெட்டுத் தம் அழகழியும் என்றனர்.

‘நீரழி பாக்கம்’ என்றது, ‘தண்புனற் பூசல் அல்லது, நொந்து, களைக வாழி வளவ என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது (புறம். 42)’ என விளங்கும் நாட்டு வளமை. அரசனிருக்கும் ஊருக்கும் ‘பாக்கம்’ பெயராதலைக் ‘கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கை’ (மதுரைக் காஞ்சி 137-8) என்பதனால் அறியலாம்.

கூலம் பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் செவ்வியாலே நிகழ்வதாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழை வளத்தாலே நிகழ்வதாகவும் கூட்டி உரைப்பர். 1-10 அடிகளால் பகைவரது நாட்டின் பழைய வளமான நிலையினையும், 11-19 அடிகளால் அந் நாடுகள் தாம் அழிந்துபோயின தன்மையினையும், 20-28 அடிகளால் சேரலாதனால் காக்கப் பெறுகின்ற நாட்டினது வளத்தையும் முறையே உரைத்தனர்.

‘நோயொடு பசியிகந்து’ என்பதே ஒரு நல்லாட்சியின் குறிக்கோளாக அமைதல் சிறப்புடைத்து என்பதும், இதனால் பெறப்படும். இது என்றைக்கும் பொருந்தும் நீதியுமாம்.

‘தாதெரு மறுத்த கலியழி மன்றத்து, உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே’ என்னும் அடிகள், போரழிவின் கொடுமையை மிகவும் தெளிவாக எடுத்து விளக்கிக் கூறுவதாகும்.

‘நீறாடு பறந்தலை’ - புழுதிபட்டுபோன பாழிடம்; வயல்கள் பண்படுத்திப் பயிரிடுவாரை இழந்ததனாலே, நெருஞ்சி படர்ந்து, புழுதிபட்டுப்பாழிடங்கள் ஆயின என்பதாம்.