பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

37


பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையேர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிற் பொழின்முழு தாண்டநின்
முன்றிணை முதல்வர் போல நின்றுநீ 20
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே.

நிலமும் நீரும் காற்றும் வானமும் எனச் சொல்லப்படுகின்ற நாற்பெரும் பூதங்களையும்போல, நீதானும் பிறரானே அளவிட்டு அறிந்து உரைப்பதற்கும் அரியவனாக உள்ளனை! நாளும் கோளும் திங்களும் ஞாயிறும் மிக்க பெருந்தீயுமாகிய ஐந்தும் ஒருங்கே தம்முட் கலந்தாற் போன்றதொரு விளக்கத் தினையும் உடையை! ‘போரிடுதலே இனித் தலையாயது’ எனப் போரை மேற்கொண்டாரான நூற்றுவர்க்குத் துணையாக அமைந்து, இறுதிவரைக்கும் போராடிய துணிவுடையோனும், ஆண்மையாளனுமாகிய அக்குரனைப் போலக் கை வண்மையினையும் பெரிதும் உடையை!

வஞ்சனையால் அல்லாதே, களங்களில் எதிர்சென்று போரிட்டு வென்ற தன்மையாலே தும்பை சூடியவராக, நின்னோடும் பகைத்துப் போரிடற்கு மேல்வந்த பகைவர்களது போர்த்திறனையும் பெருமிதத்தையும் அழியச்செய்த, செருவேட்டலையே இயல்பாகக் கொண்ட வலிமையாளனே! கூற்றமே வெகுண்டு எதிர்த்து வந்தபோதும், அதன் ஆற்றலையும் அழித்து, அதனையும் வெற்றிகொள்ளுகின்ற போராற்றலைக் கொண்டவனே!

எழுவரான முடியுடைய மன்னர்களை எல்லாம் வென்று, அவர்களது முடிப்பொன்னாலே செய்துகொண்ட ஆரம் பொருந்தியதும், வெற்றித்திருமகள் விரும்பி வாழ்வதுமான மார்பினையும், வலியமைந்த பெருத்த கைகளையும் கொண்டோனே! போராடும் நின் படைமறவர்க்கு மெய்க்கவசம் போல விளங்கி, களங்களிலே அவரைத் தாங்கிக் காத்து, வரும் பகைப்படையை எல்லாம் எதிர்நின்று தாங்கிக் களத்தையே நினதாக்கிக் கொள்ளும் சிறப்புடையோனே!

வானத்து உறைவோரான தேவமகளிரும், ‘அழகாலே அவளை ஒப்பானவள் யானே யானே’ என்று கூறித் தங்க