பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/56

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52

பதிற்றுப்பத்து தெளிவுரை


நின்னது அருளுக்கு ஒப்பாவது ஒன்றனை நினைப்போமானால் அதுதான் யாதொன்றும் இல்லை, பெருமானே!

சொற்பொருள் : புரைவது - ஒப்பாவது. பகர - இன்னது தருவோம் எனக் கூறிச் செலுத்த. துளங்கல் - அசைதல். பிசிர் - சிறு திவலை. மாக்கடல் - பெருங்கடல்; கருங்கடலும் ஆம். கடம்பு - கடப்ப மரம்; பகைவரது காவன் மரம். வியன் பணை - பெரிய முரசம். ஆடுநர் - போராடும் மறவர். பலி - பலியிட்டுப் படைப்பன. கடிப்பு - குறுந்தடி. இயவர் - முரசு முழக்குவோர். அரணம் - காவலிடம். மாதிரம் . திசை. துழைஇய - தேடியாராய்ந்த கருவுதல் - திரளுதல். கணம் - கூட்டம். மழை - மேகம். கால் - காற்று. கொட்கும் - நிலவும். நுவலும் - எடுத்துரைக்கும். பசும்பூண் - பசும் பொன்னாலே செய்யப்பெற்ற பூண். பாடினி - பாடும் பாண் மகள்.

விளக்கம் : கடலிடையுள்ள பகைவரை வெற்றிகொண்டான் என்பது தோன்ற, 'மாக்கடல் நீக்கி’ என்றனர். பெரிய தப்புநர் - பெரிதான தப்புச் செய்தவர். அவரை முற்றவும் அழித்தலே செய்தற்கு உரியதாயினும், அவரும் பணிந்து திறை பகர, அவரையும் பொறுத்தருளிய பெருந்தன்மை கொண்டோன் சேரலாதன் என்பதுதோன்றக் 'கொள்ளுநை' என்றனர்.

வலம்படு வியன்பணை - வெற்றியை ஒலிக்கின்ற பெரிய முரசம். 'வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்' எனப் புறப்பாட்டுக் கூறுவதும் காண்க (புறம் 60), போர்க்களத்திலே நாற்றிசையும் சுற்றிச் சுழன்று போரிடுவர் மறவர்; ஆதலின் அவரை 'ஆடுநர்' எனச் சிறப்பித்தனர். அவர் கால் பெயர்த்துவைத்துப் போரிடும் வரிசை முறைமையினை ஆடுதல் எனக் கூறியதும் ஆகும்.

'பொன்புனை உழிஞை சூடி மறியருந்தும் திண் பிணி முரசம்' (பு. வெ. மாலை 98) எனப் பலியிடலைப் பிறர் தெளிவு படக் கூறுதலுங் காண்க.

'அமிழ்து' - மழைநீர். 'பாடினி வேந்தே' என்றது, பாடினியின் பாட்டைக் கேட்டு உவந்து வரிசையளித்துச் சிறப்பித்த வேந்தனே என்றதாம்.