பனித்துளி 181
பெண் எவ்வளவு தான் ஆசையுடனும், அருமையுடனும் தகப்பனாரைக் கவனித்துக் கொண்டாலும் மனைவி இல்லாத குறையை அவரால் மறக்க முடியவில்லை.
காமு மிகவும் கவனமாகத் தகப்பனார் சொல்லி வந்தவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் அம்மாவைப் பற்றி நினைத்து வருந்தும் போது அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ராமபத்திர அய்யரும் சிறிது நேரம் காமுவையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், “காமு! அம்மா உனக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைத்து ஏங்கி இறந்து போனாள். உன் அம்மா சாகிற வரைக்கும் எனக்குக் கொஞ்சங்கூட உன்னைப் பற்றிக் கவலை ஏற்படவில்லை. வீட்டு மூலையில் வியாதிக்காரியாக அவள் படுத்திருந்தாலும் பெரிய துணை ஒன்று இருக்கிறது என்று இருந்தேன். அவள் போன பிறகு உன்னைப் பற்றிய கவலை மனத்தைச் சதா அரித்துக் கொண்டே இருக்கிறது. உன் கூடப் பிறந்த சகோதரிகளுக்கு அவர்கள் குடும்பம்தான் பெரிதே ஒழிய உன்னை அவர்கள் கவனிக்கப் போகிறார்களா? சீக்கிரத்தில் உனக்குக் கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். பழைய விஷயங்களையே மனசில் வைத்துக் கொண்டு நீ பிடிவாதம் பிடிக்கக் கூடாது. என்ன, தெரியுமா?’ என்று சுவாதீனமாகவும், கண்டிப்பாகவும் கூறினார் அவர்.
12-