பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20

"குழந்தாய்! உன்னைப் பெற்ற அம்மா இந்த ஊரில் இல்லையே!" என்றான் கந்தன்.

"எந்த ஊரில் இருந்தாலும் சரி. கந்தா, நீ என்னை கூட்டிக் கொண்டு போய் விட்டால் ஒரு ரூபாய் தருகிறேன்" என்றாள் முத்துமணி.

முத்துமணி கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி போட்டிருந்தாள். கைகளில் தங்கக் காப்புகள் போட்டிருந்தாள். காதுகளில் வைரத்தோடு போட்டிருந்தாள். கந்தன் மனத்தில் ஒரு பயங்கரமான எண்ணம் தோன்றியது. முத்துமணியை ஏமாற்றி அவற்றை யெல்லாம் பறித்துக் கொண்டு விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

"குழந்தாய், உன் அம்மா இருக்கிற ஊருக்குக் காட்டுப் பாதையாகப் போக வேண்டும்" என்று சொன்னான் கந்தன்.

"எந்தப் பாதையாக இருந்தாலும் சரி, நீ என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடு" என்று சொன்னாள் முத்துமணி.

"சரி, இன்று இரவு அப்பாவும் அம்மாவும் தூங்கிய பிறகு கட்டுத் துறைக்கு வா. நான் வைக்கோல் போர் அடியில் படுத்திருப்பேன். என்னை எழுப்பு. நான் உன்னைப் பெற்ற அம்மாவிடம் கூட்டிக் கொண்டு போகிறேன்" என்றான் கந்தன்.

"இப்போதே போவோம். புறப்படு’"என்றாள் முத்துமணி.