பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



2. பொருள் பொதிந்த
புதிர் வாழ்க்கை

பணம் பணம் என்று அலைவதே வாழ்க்கையின் இலட்சியம் என்பது எல்லா நிலை மக்களின் உயிர்க் கொள்கையாக மாறிப் போயிருக்கிறது.

‘ணம் ணம்’ என்ற மன அரிப்புடன் மனதைப் பிடுங்கித் தொலைக்கிற பணத்தைக் கட்டிக் கொண்டு அழுகிற அல்லல் படுகிற மக்களைத்தான் எல்லா இடங்களிலும் இன்று காண முடிகின்றது.

இதில் படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதமில்லை. அறிஞர்கள் அசடர்கள் என்றும் வித்தியாசமில்லை. எல்லோரும் ஒரே குட்டைதான். ஒரே மட்டைதான்.

இல்லாத பணத்திற்காக ஏங்கி ஏங்கி அலைவது, வந்துவிட்ட பணத்தை எப்படி காத்துக் கொள்வது என்று வீங்கி வீங்கி அழுவது.

வந்த பணம் போய்விடக்கூடாது என்ற ஏக்கத்தோடு தூக்கத்தைத் தொலைத்து விட்டு தொல்லைப்பட்டு சாவது, சரிவது, தொலைவது.

இப்படி பொழுது விடிந்து பொழுது முடிந்து போகிறவரை, பொருளுக்குத்தான் முக்கியத்துவம் தந்து பேசுகிறது இந்தச் சமுதாயம். சமுதாயத்தின் அங்கம்தானே மக்கள் அனைவரும்.

பணம் எதற்கு? சொத்து எதற்கு?
என்ன கேள்வி இது? சுகம் பெறத்தானே.