பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை-நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின்புறலாம்.

- இராசமாணிக்கனார்.