பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பல்லவப் பேரரசர்
1. பல்லவர் யாவர்?

பல்லவர் யாவர்? இக்கேள்விக்குத் திட்டமான பதில் கூறக்கூடவில்லை. பல்லவர் ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகள் தென்னிந்தியாவிற் பேரரசு செலுத்தினவர். அவர்கள் என்றும் அழியாத நிலையில் பல குகைக்கோவில்களை அமைத்திருக்கிறார்கள். பாறைகளையே கோவில்களாக மாற்றியிருக்கிறார்கள்; பிராக்ருத மொழியிலும் வடமொழியிலும் கிரந்த - தமிழ் மொழியிலும் தங்கள் பட்டயங்களையும் கல்வெட்டு களையும் வெளியிட்டிருக்கிறார்கள், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம், குமார மார்த்தாண்ட புரம், பல்லவபுரம் (பல்லாவரம்), மஹேந்திரவாடி, பரமேஸ்வர மங்கலம், மஹேந்திர மங்கலம், மஹாமல்லபுரம் என்று பல இடங்கட்குத் தங்கள் பெயர்களை வழங்கியிருக்கிறார்கள் பல கோவில்கட்கு இராஜசிம்மேஸ்வரம், வித்யாவிநீத் பல்லவேஸ்வரம், பரமேஸ்வர் விண்ணகரம், சத்ருமல்லேஸ்வரம், மஹேந்திரவிஷ்ணுக்ருஹம், மஹேந்திரப்பள்ளி என்று தங்கள் பெயர்களை இட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும், அவர்கள் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் என்பதை உணர்த்துகின்றனவே தவிர, அவர்கள் யாவர்? எங்கிருந்து வந்தவர்? என்னும் கேள்விகட்கு விடை அளிப்பனவாக இல்லை. இதனால், ஆராய்ச்சி அறிஞர் பலவாறு முடிபு கூறி வருகின்றனர்.