பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடக்கிருத்தல்

181



நாட்டில் பாரதக்கதையைக் கூறும் பழக்கம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் (அப்பர், சம்பந்தர் காலத்திலே) உண்டானது என்பதை அறியலாம். அவன் ‘கலியை ஒழித்தவன் (கலிபல மர்த்தனன்)’ என்று உதயேந்திரப்பட்டயம் கூறியுள்ளதாலும் இவன் ஆட்சியில் போர்களே நிரம்பி இருந்தன ஆதலாலும் நாட்டில் வறுமை தோன்றியிருத்தல் இயல்பே. அதனை இவன் அரும்பாடுபட்டு ஒழித்தான் எனக் கொள்ளலாம்.

சமயப் பணி

இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லன் சிறந்த வைணவன். இவனைக் காசக்குடிப் பட்டயம் ‘அரி சரணபரன்’ என்றும், தண்டன் தோட்டப் பட்டயம் ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை’ என்றும் கூறுகின்றன. இக் குறிப்புகளோடு, திருமங்கையாழ்வார் பாடியருளிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும் பரமேச்சுர விண்ணகரப் (வைகுந்தப் பெருமாள் கோவில்) பதிகத்தையும் கொற்றங்குடிப் பட்டயத்தில் பெருமாள் வணக்கமாகவுள்ள முதல் இரண்டு பாக்களையும் ஒப்புநோக்கின், பல்லவ மல்லன் சிறந்த வைணவன் என்பது நன்கு விளங்கும். இவனே வைகுந்தப் பெருமாள் கோவிலை நலமுற அமைத்தவன்; அதற்கு வேண்டும் நலங்கள் பலவாகச் செய்தான். இவன் ஆட்சியிற் பல கோவில்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவற்றுள் (1) கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோவிலும், (2) திருவதிகை வீரட்டானேச்சுரர் கோவிலும், (3) புதுக்கோட்டையில் உள்ள குன்றாண்டார் கோவிலும் சிறந்தன. இவன் பல்வேறு கோவில்கட்குத் தானங்கள் பல செய்துள்ளான். காஞ்சியில் உள்ள முத்தீச்சுரர் கோவில் இவன் காலத்தில் பெருஞ் சிறப்புற்றது.

இவன் காலத்தில் ஆர்க்காடு நகர்க்கு அருகிலுள்ள பஞ்ச பாண்டவர் மலையில் ஒரு குகை சமணர்க்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், நந்தி போத்தரையர்க்கு ஐம்பதாம் யாண்டு