பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

11



சமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில்களைக் கட்டியவன்[1] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ?[2] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை? இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[3]

இனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.

காஞ்சியின் பழைமை

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல


  1. திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.
  2. R.Gapalan’s “Pallavas of Kanchi’, p.31.
  3. C.V.N. Iyer’s “Origin and Development of Saivism in S.India,’ p.183
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/31&oldid=583529" இலிருந்து மீள்விக்கப்பட்டது