பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

பல்லவர் வரலாறு



வடமொழிப் பட்டயங்கள்

பல்லவர் வடவர் ஆதலின், அவர் பட்டயங்கள் எல்லாம் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. பிற்காலப் பல்லவர் பட்டயங்கள் எல்லாம் சிறந்த வடமொழி நடை உடையன. முதலாம் பரமேச்சுரவர்மன் வெளியிட்ட கூரம்பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வருணனை படித்து இன்புறத்தக்க பகுதியாகும். அதனை வரைந்தவர் சிறந்த வடமொழிப் புலவராகவும் போர் வருணனைகள் கொண்ட நூல்கள் நன்கு கற்றவராகவும் இருத்தல் வேண்டும். இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப்பட்டயம் பல்லவர் வரலாற்றைச் சிறந்த முறையில் விளக்குவதாகும். அதன் நடையும் உயர்ந்த நடை. இவ்வரசனுடைய தண்டன் தோட்டப்பட்டயம். மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர் பாளையப் பட்டயம் முதலியவற்றில் வடமொழி நடை அழகாக இருக்கின்றது. இராசசிம்மன் காலத்துக் கயிலாசநாதர் கோயில் வடமொழிக் கல்வெட்டுகள் சுருக்கமும் தெளிவும் உடையன. முதலாம் பரமேச்சுரனுடைய மகாபலிபுரத்துக் கல்வெட்டுகள் சிலேடைப் பொருள் கொண்ட சொற்றொடர்கள் கொண்டவை.

வடமொழி நூல்கள்

லோகவிபாகம், கிராதார்ச்சுனியம். அவந்திசுந்தரி கதை. மத்தவிலாசப் பிரகசனம், காவ்யாதர்சம் போன்ற வடமொழி நூல்கள் பல்லவர் கால வடமொழி வளர்ச்சிக்குரிய சான்றுகளாம்.

இவை அனைத்தையும் நோக்க. பல்லவர் அவைக்களத்தில் சிறந்த வடமொழிப் புலவர்கள் இருந்தார்கள் என்பது தெரிகிறதன்றோ?

அச்சுத விக்கிரந்தன் (கி.பி. 350)

புத்ததத்தர் (கி.பி.350) காலத்தவனான இவனைப்பற்றிய தமிழ்ப் பாடல்கள் சில காணக்கிடக்கின்றன. அவற்றால் இவன் தமிழை ஒரளவு வளர்த்த களப்பிர அரசன் என்பது புலனாகிறது.[1]


  1. Tamil Navaiar Saritai, S.154-157.