பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆய்வினின்றும் புலனாகும் செய்திகள்

1. ஐரோப்பியக் (கிரேக்க, உரோமானிய) கட்டடக் கலைக்கு இணையான உயர்த்திறன் தமிழர் கட்டடக் கலைக்கு இருந்துள்ளது.

2. ஒரு கட்டடத்துக்கு மனை, மரம், திசை, நாள், கோள் முதலிய அனைத்தும் ஆய்ந்து, தேர்ந்து கொண்டு செயற்படும் திறனைத் தமிழர் பெற்றிருந்தனர்.

3. கட்டடக் கலை மரபு பற்றியே தமிழகத்தில் பல்வேறு நூல்கள் தோன்றிச் சிறந்துள்ளன. திராவிடக் கட்டடக் கலை என்ற தனிப் பிரிவே உருவாகியிருந்துள்ளது.

4. கோயில்களை அமைப்பதில் கலையழகும், நுணுக்கமும் சிற்ப வேலைப்பாட்டுத் திறனும், படிப்படியான வளர்ச்சியும், தமிழர் பெற்றுயர்ந்துள்ளனர். வானுயர மாடங்களும், கோபுரங்களும், தமிழரின் கட்டடக் கலைச் சிறப்பின் மகுடமாயிருந்துள்ளன.

5. அரண்மனைகளை, அவற்றுக்குரிய உட்பிரிவுகளுடன் வகுத்து அமைக்கும் வல்லமையும், திறனும் தமிழர் கட்டடக் கலைக்கு இருந்துள்ளன.

6. கோட்டை, கொத்தளம், அகழி முதலியவற்றைப் பாதுகாப்புபடை வளத்துக்கு ஏற்பச் செம்மையாகத் தமிழர் அமைத்துள்ளனர்.