பக்கம்:பழைய கணக்கு.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

ஒரு வருடம் கரும்பு பயிருட்டுப் பார்க்க விருமபினார் என் தந்தை.

நெற்பயிரைத் தவிர வேறு எதுவும் விளைந்து பார்த்திராத எனக்கு இது சற்று ஆச்சரியமாகவும் புது அனுபவமாகவும் இருந்தது. கரும்பு, வெல்லம், கரும்புச்சாறு இதெல்லாம் இலவசமாகச் சாப்பிடலாம் என்ற நினைப்பே இனிக்கச் செய்தது

நிலத்தை ஆழ உழுது பாத்திகள் வெட்டி கரும்புக் கணைகளைக் கொஞ்சம் முனை தெரியும்படி மண்ணில் ஊன்றி நீர் பாய்ச்சிய போது அந்தக் காட்சியைக் கண் கொட்டாமல் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் நிலத்தில் ஊன்றிய அந்தக் கரும்புத் துண்டுகள் முளைவிட்டு வளர்ந்தபோது பெரிய ஆச்சரியம் நிகழ்வதுபோல் தோன்றியது.

கரும்பு முற்றி சாகுபடிக்குத் தயாரானதும் ஒரு நல்ல நாள் பார்த்து கரும்பு வெட்டத் தொடங்கினார்கள்.

கிணற்றடியில் பக்காவாக ஒரு குடிசை போட்டு அடுத்த சில தினங்களுக்குள் நாங்கள் அந்தக் குடிசைக்குக் குடியேறினோம்.

கிணற்றுக்குப் பக்கத்திலேயே கரும்புச்சாறு பிழியும் ஆலையை நிறுவினோம்.

ஆலை இயக்கத்துக்கு இரண்டு மாடுகள் போதவில்லை. அந்த மாடுகளுக்கு ஓய்வு கொடுக்கும்போது மாற்றக வேறு மாடுகள் தேவைப்பட்டன. இன்னொரு ஜோடி மாடுகள் விலைக்கு வாங்கி ஷிப்ட் முறையில் வேலை வாங்கப் பொருளாதார வசதி இல்லை.

புதிதாக விலை கொடுத்து மாடுகள் வாங்குவதைக் காட்டிலும் யாரிடமாவது ஒரு மாதத்துக்கு மாடுகளை இரவலாக வாங்கிக் கொள்ளலாம் என்பது அம்மாவின் யோசனை.

கடுகனூரிலுள்ள என் மாமாவிடம் மாடுகள் ஏராளமாயிருந்தன. ஆனாலும் அப்பாவுக்கு அவரிடம் கேட்க இஷ்டமில்லை.

“நான் கேட்கட்டுமா?” என்று அப்பாவிடம் சொன்னபோது, “கேட்டுப் பார்” என்றார் அப்பா, மாமாவுக்கு என்னிடம் அளவு கடந்த அன்பு ஆனதால் நான் கேட்ட உடனேயே பதில் ஏதும் சொல்லாமல் சந்தோஷமாக மாடுகளை அனுப்பி வைத்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/148&oldid=1146140" இலிருந்து மீள்விக்கப்பட்டது