பக்கம்:பழைய கணக்கு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வெள்ளிமணிக்குப் பிறகு எனக்கும் சின்ன அண்ணாமலைக்கும் இருந்த நட்புறவு முறிந்து விட்டதால் சிறிது காலம் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். அந்த நேரத்தில் நான் அவரிடம் கொடுத்து வைத்திருந்த தொகுப்பை அவர் தன்னுடையதாக பாவித்துத் தன் பெயரிலேயே அப்புத்தகத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தச் செய்தி அறிந்தவுடன் என்னால் பொறுக்க முடியவில்லை. உடனே என் ஞாபகத்திலிருந்தே அந்த உவமைக் கதைகள் அவ்வளவையும் மீண்டும் எழுதி நானும் புத்தகமாக அச்சடித்தேன். பேராசிரியர் கல்கி இதற்கு முன்னுரை வழங்கினர். புத்தகம் பைண்டாவதற்கு முன் அச்சிட்ட ஃபாரங்களை ராஜாஜிக்கு அனுப்பி, புத்தகம் வெளியிடுவதற்கு உரிமை கேட்டிருந்தேன். அவரும் மகிழ்ச்சியோடு எனக்கு உரிமை வழங்கிக் கடிதம் எழுதியிருந்தார்.

“அதெப்படி நீங்கள் சாவிக்கு உரிமை கொடுக்கலாம்? நான் ஏற்கனவே புத்தகம் தயாரித்தாகி விட்டது” என்று சின்ன அண்ணாமலை ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார். ராஜாஜி உடனே, “ஆயிரம் பிரதியுடன் நிறுத்திக்கொள். இரண்டாம் பதிப்பு போட வேண்டாம்” என்று எனக்கு இன்னொரு கடிதம் எழுதியிருத்தார். எனக்கு இது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

ராபின்ஸன் பார்க்கில் குறிப்பெடுக்க ஆரம்பித்தது முதல் யூனிவர்ஸிடி லேப்ரரி பழைய பேப்பர்களைப் பார்த்துத் தொகுத்தது வரை எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் எழுதி “இது அத்தனையும் என் உழைப்பு. சின்ன அண்ணாமலையையும் உங்களுக்குத் தெரியும். என்னையும் தெரியும். இரண்டு பேரையும் எடைபோட்டு முடிவுக்கு வரவும் உங்களுக்குத் தெரியும்” என்று கடிதத்தை முடித்து, கூடவே நான் தயாரித்திருந்த புத்தகத்தையும் அனுப்பி வைத்தேன்.

ராஜாஜி அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு அதில் சில திருத்தங்களையும் செய்து அனுப்பியிருந்தார். ஒரு திருத்தம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு வாக்கியத்தில் ‘மூளை’ என்ற சொல் இடம் பெற்றிருந்தது. ராஜாஜி அதை அடித்து ‘அறிவு’ என்று மாற்றியிருந்தார்.

கூடவே அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்:

“எல்லா விஷயமும் தெரிந்தது. உன்னுடையதுதான் திரட்டு. இன்னொன்று திருட்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/21&oldid=1145678" இலிருந்து மீள்விக்கப்பட்டது