பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


தோழியின் சொற்கவையோ அப்பொழுது தோன்றவில்லை
‘வாழியவள்!’ என்றுவமைச்[1] சொல்வாய்ந்து சொற்றொடரை
எண்ணியெண்ணிப் பின்னர் எதற்காக நாம் சிரித்தோம்?
கண்ணான செந்தமிழிற் கற்றோர் வியப்பதற்கும்,
எண்ண இனிப்பதற்கும் எத்தனையோ சொற்களுண்டு!
வண்ண மயிலாளே! வாழ்க்கை வளமுறவே
அன்பு முதற்பொருளாம்! அத்தனையும் பின்துணையாம்!
இன்பத்தினூடே, இடையிடையே ஊடுவதும்
துன்பத்தி னோடுநாம் தோளிணைந்து நிற்பதுவும்
அன்பின் அசைவே! மனைக்கிழத்தி! இன்னுங்கேள்!
அன்பு வளர்ந்தால் அலைகடல் சூழ் நம் நாட்டில்
துன்பமே இல்லை! தொழிலாளி செல்வனென்ற
வம்பில்லை! தாழ்வுயர்வுச் சாதி மலிவதில்லை!
செம்மை வழியொன்று செப்புகின்றேன்: அன்பாலே
நாட்டின் விளைவைப் பொதுவாக்கி நாம் வாழ்ந்தால்
நாட்டோடு நாடாய் நடைபோட மாட்டோமோ?
உண்ண உணவும், அறிவும், அமைதியும்,
கண்ணாம் மகிழ்ச்சி தெளிவும், உணர்வும்,
நிறைவும் இருந்தாலும், வாழ்க்கைக்குத் தேவை

குறையாத அன்பென்றே கூறு!

நாள்: 2–3–1956 இடம்: திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்,
தலைவர்: பண்டித, வித்துவான், திரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார்.
தலைப்பு: வாழ்க்கை வளமுற–அன்பு.

1. புதுக் குடியர்-புதுமையாகக் கள்ளுண்டோர்; புதுக் குடித்தனம் ஏற்றோர்.

  1. 2. உவமைச் சொல்-புதுக்குடியர் என்னும் உவமைச்
    சொல்.