பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

செத்தமொழிக் காரருனைச் சீர்குலைய வைத்தால்
      செங்குருதி நான் தருவேன்! உனையழிக்க எண்ணின்
பெற்றவென் றன் முதற்குழந்தை, ஆசைமனை யாட்டி
      பிணமாவர்! உன் தாழ்வே தமிழினத்தின் தாழ்வாம்! 7

மூவரசர் உனைவளர்த்தார்! உன்னாலே அந்த
      முடிமன்னர் வாழ்ந்தார்கள்! தமிழ்மக்கள் வாழ்ந்தார்!
மாவரசு வாழ்விக்கும் எனச்சொல்லி நம்மை
      வந்தவர்கள் கெடுத்தார்கள்! மதிகெட்டுப் போனோம்!
பாவரசு வழிவந்த நானென்றன் கன்னிப்
      பைந்தமிழுக் கேயாவும் படைத்திட்டேன்! மீண்டும்.
‘தாவரசு எம்முரிமை’ எனச்சொல்லி இன்று
      தமிழ்முழக்கம் செய்கின்றார்! தூங்குகின்றார் சில்லோர்!

தூங்குகின்ற தமிழர்க்கே தூதோலை நீட்டத்
      தூதனுப்பும் இலக்கணத்தை நான் தேடிப் பார்த்தேன்;
ஏங்குகின்றேன்; கிளியன்னம் குயில்வண்டு யாவும்
      என்னேவல் செய்யாவே! குறையிருக்கக் கண்டேன்!
தீங்கவிதை விடுக்கின்றேன்! செவிசாய்த்தே என்றன்
      செந்தமிழைக் காப்பதற்கே ஓடோடி வாரீர்!
ஓங்குபுகழ் தமிழ்காக்க ஓடோடி வாரீர்!
      உலகத்தார் உமிழாமுன் ஓடோடி வாரீர்! 9

அன்று முதல் இன்றுவரை அழியாத கன்னி
      அருந்தமிழை நம்முயிரை நம்விழியை வாழ்வைக்
கொன்றொழிக்க விடுவதுவோ? திரிகல்லை ஒத்த
      கொட்டுபறை கேட்டவுடன் தோள்குலுக்கி ஆர்த்தே
சென்றகளம் மறந்தீரோ? சிலை செய்யக் கல்லும்,
      தென்னாட்டீர்! கங்கைகொண்ட தினவெடுத்த தோளும்,
இன்றெங்கே? இன்றெங்கே? கொல்புலிகாள்! சீறி

      எழுந்திருப்பீர்! பசைமுறிப்போம்! தமிழ்காப்போம்! வாரீர்!