பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


மண்ணுழுது பிளப்பதற்கே இயந்தி ரங்கள்,
     மலையுடைத்து நீர்பாய்ச்ச இயந்தி ரங்கள்,
கண்ணுக்குத் தெரியாத செந்நெல் நோயைக்
     காப்பதற்கு நன்மருந்து யாவும் தந்தே
உண்ணுதற்கே உணவளிக்கும் உழவர் வாழ்வை
     உயர்த்துவதே குடியரசின் உயர்ந்த நோக்கம்!
மண்ணுழுவோம்; வினைவடைவோம்! இஃதே இந்த
     மாநிலத்தில் நாமடையும் இன்ப வாழ்வாம்! 11

(முச்சீர் இரட்டை)



உழத்தி :
கருக்கலிலே எழுந்துவந்த மச்சானே!—நம்ப
கழனியெலாம் உழுதாச்சா மச்சானே?

உழவன் :
கருக்கலிலே எழுந்துவந்தேன் பொன்னாத்தா!—நம்ப
கழனியிலே தண்ணியில்லே பொன்னாத்தா! 12

உழத்தி :
இரவெல்லாம் தூங்கிவிட்ட மச்சானே!—கழனியிலே
எப்படித்தான் தண்ணிபாயும் மச்சானே?

உழவன் :
இரவெல்லாம் கண்விழிச்சி வைச்சேண்டி—தண்ணி
எங்கெங்கோ பாய்ஞ்சிடிச்சு! தப்போடி? 13

உழத்தி :
கஞ்சிவந்து குடிச்சுவிட்டு மச்சானே!—நீ
காரியத்தைப் போய்ப்பாரு மச்சானே!

உழவன் :
கஞ்சிவேண்டாம்; காம்பு கொடு பொன்னாத்தா!—நான்
களைக்கமாட்டேன்; சளைக்கமாட்டேன் பொன்னாத்தா! 14