பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. நானிலம்

தமிழ் வாழ்த்து

(குறள் வெண்பா)

நாகாக்கும்1 செந்தமிழே! நானுன்னைப் பாடவே
காகா 2எனக்கரைந் தேன்.

குறிஞ்சி
(பஃறொடை வெண்பா)


கார்தவழ் நீண்ட கழைவளர் மாமலையின்
சாரல் அருகில் சரிந்த சிறுபாறை
மேலுதிர்ந்த பூக்கள் விலையுயர்ந்த கம்பளத்தை
ஆடரங்கின் மேலே அமைத்ததைப் போலிருக்கும்!
உச்சி மலையின் ஒருபுறத்தில் தேனடையில்
நாவற் பழவண்டு நல்யாழ் இசைத்திருக்கும்!
வேரிற் பழுத்த பலா தூக்கும் மந்தியெலாம்
சேர முழவோசை சேர்க்க வருவோராம்!
மான்களோ பார்க்க வருவோரை மானுமே!
மயிலாடு பாறை மகளிர் கலை மன்றம்!
என்றும் அழியா இயற்கையின் பேரழகு
குன்றாக் குறிஞ்சி நிலம்!

முல்லை


கொல்லைப் புதரெவ்லாம் ‘குக்குக்கூ’ என்றுகுயில்
வல்லார் தமிழை வழங்கி வரவேற்கும்!
பச்சை மரத்தில் பசுந்தழைக் கொம்பிருந்து
கிச்சுக்கிச் சென்னும் கிளிப்பிள்ளை! புறவு
பறந்து பறந்து பகலெலாம் சுற்றி

இறைந்த தினையை எடுத்தேகும் கூட்டிற்கே!