பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


முறச்செவிகொள் காட்டானை முன்னர் நீண்ட
     முத்துவிளை தந்தத்தை ஒடித்து வீழ்த்தும்
மறச்செயலை, வாள் வீச்சை, வாரித் தந்த
     மன்னவர்கள் கொடைவளத்தைப், போர்க்களத்துப்
புறச்செயலைப், போர்முகத்தே தனித்த வீரன்
     புண்பட்ட பெருந்தோளை, மக்கள் வாழ்வின்
அறச்செயலைப், பெரும்புகழைச் சுட்டிச் சுட்டி
     அறிவுறுத்த எழுந்தவெலாம் புறப்பாட் டாமே!

கதைப்பாடல்



மனை யிருந்து வாழுகின்ற மக்கட் கூட்ட
     வாழ்க்கையிலே நிகழுகின்ற இன்ப துன்பம்
வினையிருந்தே விளைவதென விளக்சு, மக்கள்
     மேன்மையுற வேண்டுமென்ற வழியைக் காட்டப்
பனையிருந்து இறக்குகின்ற பதநீர் போலப்
     பலகவிதைப் பெருவளத்தைக் கவிஞர் செஞ்சொற்
சுனையிருந்து மக்கட்குத் தொகுத்துத் தந்த
     தூயதமிழ்க் கவிதைகளே கதைப்பாட் டாமே!

தென்னகத்தை அரசாண்ட வேந்தர் மூவர்
     செந்தமிழைக் காத்தார்கள் ! அதனா லன்றோ
முன்னாளில் பலதுறையில் வானில் பூத்த
     முழுநிலவாய்த் தமிழன்னை இனிமை தந்தாள்!
பின்னாளில் படையெடுப்பால் அழிந்தாள் என்றே
     பேசுகின்றார் ஒருசாரார்! தமிழைக் காத்தோர்
எந்நாளில் குறைந்தார்கள்? தமிழுக் கென்றே
     இருந்தார்கள்; இறந்தார்கள்; இருப்பார் தாமே!

பாரதியும், பாரதியும், அவர்க்குப் பின்னர்ப்
     பாட்டிசைத்த சுந்தரமும், திரு.வி. க.-வும்,
கார்கிழித்த ஞாயிறெனப் புதுவை தோன்றிக்
     கற்றோரின் மற்றோரின் உள்ளக் கோயிற்