பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“எல்லாம் சூழ்நிலையின் சிறப்பு இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி அருகே இருந்தால் கல்லும் மரமும்கூடச் சொல்லுமே கவி? என்னைப்போல் ஒரு வயதுத் துறவி ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.”

“ஏதேது? அடிகளைப் பேச விட்டுவிட்டால் விநயமாக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டே இருப்பீர்கள்போல் தோன்றுகிறதே.”

“எல்லோரிடமும் அப்படிப் பேசிவிட முடியுமா? ஏதோ உன்னிடத்தில் பேசவேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது பேசினேன்.”

இப்படிக் கூறியதும் மறுபடியும் அவள் தன்அகன்ற நீண்ட கருவிழிகளால் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். துறவியும் முன்போலவே அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.

பேசிக்கொண்டே இருவரும் அரண்மனைக்குள் நீராழி மண்டபத்தின் கரையருகே வந்து நின்றனர். துறவி நீராடுவதற்குத் தயாரானார். “நீராடித் தயாராக இருங்கள். நான் நந்தவனத்தில் போய்ப் பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்துகொண்டு வருகிறேன்” என்று புறப்பட்டாள் குழல்மொழி.

அவள் நந்தவனத்து வாசலில் நுழைய இருந்தபோது ஆற்றின் கரையிலுள்ள படகுத் துறைப்பக்கமிருந்து படகோட்டி அம்பலவன் வேளான் வந்து கொண்டிருந்தான். அவன் அவளை நோக்கித்தான் வருவதுபோல் தெரிந்தது. அவசரமும் பரபரப்பும் அவன் வருகையில் தெரிந்தன.

“என்னைத் தேடித்தான் வருகிறாயா?” என்று அவள் கேட்டாள்.

“ஆமாம், அம்மா! போகும்போது உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி மகாமண்டலேசுவரர் இரகசியமாக ஒரு செய்தி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைச் சொல்லுவதற்காகத்தான் இவ்வளவு அவசரமாக வந்தேன்” என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கினான் படகோட்டி அம்பலவன் வேளான்.