பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

209


கோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் , பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்தபோது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன்.

உள்ளே போனவன் திரும்பி வருகிறவரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அ.முத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிட மிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு.

அதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். “மகா மண்டலேசுவரர் உங்களை அழைத்துவரச் சொன்னார்.”

“நானே போய்க்கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்லவேண்டாம்” என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன்.

அரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தரங்க மந்திராலோசனைக்கென்றே தனி மண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள்? என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண்டாயிற்று. பட்டி மண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன்.

சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். “என்ன செய்தி: இப்பொழுதுதான் வருகிறாயா?” என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். “சுவாமீ! தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றிவிட்டேன்” என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன்.

பா. தே. 14