பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

21


முடுக்குகளில் தேங்கி நின்ற பயங்கர இருளைச் சின்னஞ் சிறு தீபங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கல்பகோடி காலமாக மூன்று மகா சமுத்திரங்களும் ஒன்று சேரும் அந்த இடத்தில் கன்னித் தவம் இயற்றிக் கொண்டிருக்கும் குமரித் தாயின் தரிசனம் வானவன் மாதேவியின் மனத்தில் நிர்மலமானதொரு சாந்தியை உண்டாக்கியது. கார்ப்பக்கிருகத்தில் குமரித் தேவியின் நெற்றியிலிருந்து மின்னல் கீற்றுப் போல் வைர வைடூரியங்களில் இழைத்த திலகம் ஒளி வீசி மின்னியது.

“அரசி! நான் தமிழ் நிலத்தின் எல்லையைக் காக்கும் தமிழ்த்தேவி. நீ தமிழகத்தையே ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதிமன்னனான ஒருவனை மணந்த பாண்டிமாதேவி, அஞ்சாதே! என் அருள் உனக்கு உண்டு” என்று திருநுதலின் புருவங்களுக்கிடையே அருளொளி வீசும் திலகச் சுடர் சொல்லாமல் சொல்லுகிறதோ?

“தேவி! இந்தச் சந்நிதிக்கு நேரே கடல் தெரியும்படியாக மதிற் சுவரில் ஒரு துவாரம் இருந்ததாம். அன்னையின் திலகச் சுடரொளி கண்டு கவரப்பட்ட எத்தனையோ மரக் கலங்களும், கப்பல்களும் போக வேண்டிய துறை இதுதானோ என மயங்கி வந்து பாதைகளில் மோதிச் சிதைந்ததுண்டாம். இப்போது அந்தத் துவாரத்தை மூடிவிட்டார்கள்” என்று கூறினார் பவழக்கனிவாயர்.

பக்திப்பரவசம் நிறைந்த முகபாவத்தோடு சந்நிதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகாராணி பவழக்கனிவாயர் கூறியதைக் கேட்டுத் தலையசைத்தார். தன் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளம் பெண்களைப் பார்த்து ஒருமுறை புன்முறுவல் பூத்தார். பகவதியும் விலாசினியும் பதிலுக்கு மரியாதையாகப் புன்னகை செய்தார்கள்.

அர்ச்சகர் எல்லோருக்கும் குங்குமம், சந்தனம் ஆகிய பிரசாதங்களைக் கொண்டு வந்து அளித்தார். குங்குமம் முதலியவற்றை அர்ச்சகர் கொண்டு வந்தபோது மகாராணி கைகூப்பி வணங்கிவிட்டுத் திருநீற்றை மட்டும் எடுத்து அணிந்துகொண்டார்.