பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. தலையாலங்கானத்துப் பெரும் போர்

அரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம் பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுகட்டில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக்கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!

‘இவனுடைய அறிவையும் குலப் பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே! மூதூர் வாயிலிற் பணிக் கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டுவிட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா? அவர்கள் அனைவரையும் இன்றைப் போதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களோ!’ என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர் கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.

பா-3