பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பாண்டிய மன்னர்

இவர்க்கு இரவுபகல் என்று இரண்டு இல்லை. இவரது களவுத் தொழிலை விரித்து உணர்த்த எம்மால் இயலுமோ? களவு நூற் செய்தி முழுவதும் யாம் அறிவோமாயின் நாம் ஓடியொளித்தற்கும் இடம் இல்லை.

“முன்னாளிலே ஒரு கள்வன் தூதுருக் கொண்டு வந்து, அரண்மனை வாயிலிலே பகற் பொழுதிற் காத்திருந்து, இராப் பொழுது வந்ததும் மாதருருக் கொண்டு அந்தப்புரத்தினுட் புகுந்து, விளக்கு நிழலிலே பள்ளியறையினுள் அஞ்சாது நுழைந்து அடங்கி, இந்நெடுஞ்செழியனுக்கு இளங்கோவாகிய இளஞ்செழியன் துயில்கின்ற சமயம் அவனது மார்பில் உள்ள ஒளி மிக்க வயிர மாலையை விரைவில் வாங்கினான். துயிலுணர்ந்த இளஞ்செழியன் தோளிலே மாலையைக்காணாது உடைவாளை யுருவினன். அதனுறையைக் கள்வன் கையகத்தே பற்றிக் கொண்டான். இளஞ்செழியன் வாளாற் குத்தும் தோறும் கள்வன் அதன் உறையை நீட்டி, அக்குத்துக்களைத் தாங்கித் தடுத்தான். அது கண்டு சினமிக்கு மற்போர் செய்யப் புறப்பட்ட இளவரசனுக்கு அருகில் இருந்ததொரு பெரிய தூணைத் தானாகக் காட்டி மயக்கிவிட்டு, அக்கள்வன் மறைந்தான். அன்று தப்பிய கள்வனை இன்றுவரை யாரும் கண்டவரிலர். ஆதலால், களவு நூற் பயிற்சி மிக்க இக்கள்வர்க்கு நிகர் இவரேயன்றி வேறு எவரும் இலர். நும் கண்முன்னே நல்லோனாகத் தோற்றும் இவன், நான் மேலே காட்டிய களவு நூன் முறை பற்றி ஆராய்ந்தால், தொழிற்றிறம் மிக்க கள்வன் ஆவனென்பது நுமக்கே புலப்படும்.”

அங்கு நின்றிருந்த அரச சேவகன் ஒருவன், இச்செய்தி முழுவதையும் கேட்ட பிற்பாடு, தான் அறிந்த செய்தி யென்று ஒன்றைக் கூறத் தொடங்கி, "முன்னாளிலே நிலத்தைத் தோண்ட உதவும் உளியை யுடையனாய கருநிறமான ஆடையை யுடுத்தவனாய், பல வகைப் பட்ட பொற்கலன்களை நச்சிய வேட்கையாற் பற்றிய