பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பாண்டிய மன்னர்

என்று எவரும் கூறாரோ?" என்று பலவாறு புலம்பினள். மேலும்,

“பெண்டிரு முண்டுகொல்! பெண்டிரு முண்டுகொல்!
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்!
சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்!
ஈன்ற குழவி யெடுத்து வளர்க்குறாஉம்
சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்!
தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்!
வைவாளிற் றப்பிய மன்னவன் கூடலிற்

றெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்!"[1]

என்று கூறி அழுதாள். பிறகு கணவனைத் தழுவிக் கொண்டாள். அவன் உறங்கி விழிப்பான் போல எழுந்து, ’மதிபோன்ற உன் முகம் கன்றியதே!' என்று கூறி, அவள் கண்ணீரைக் கையால் மாற்றினான். அவள் கணவன் அடியிற் பணிந்தாள். தன்னுடம்பைக் கைவிட்டுச் சுவர்க்கம் புக எழுந்த அவன், 'நீ இங்கிருக்க,' என்று கூறி, அமரரொடு சென்றான்.

அது கண்ட கண்ணகி, “இஃது என்ன! மாயமோ, வேறென்னோ! என்னை மருட்ட வந்த தெய்வமோ? என் தலைவரை எங்குப்போய்த் தேடுவேன்? அஃது எளிதாயினும் என் சினம் தணிந்தன்றிக் கூடேன். கொடிய வேந்தனாகிய பாண்டியனைக் கண்டு, இச்செய்தியைக் கேட்பேன்,” என்றாள். பின்னர் எழுந்து, தான் முன் கண்ட தீக்கனவை நினைந்து, கண்ணீர் சொரிந்து, பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனை வாயில் முன் போய் நின்றாள்.

—————————————————

  1. சிலப்பதிகாரம் - ஊர் சூழ் வரி