பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

“எம்மதத்தவரும் எந்நாட்டவரும் எந்நிலையினரும் இந்நாட்டில் அமைதியோடு வாழ்வெய்துக,” என்று அரசர் பெருமான் சாசனத்தில் தெரிவித்த வண்ணம் பாரதபூமி முழுவதும் நாஸ்திகராயினும், ஆஸ்திகராயினும், கர்ம யோகியராயினும், ஞான யோகியராயினும், தமிழராயினும், பிற மொழியாளராயினும் ஒருவர்க்கொருவர் மன வேறுபாடின்றி வாழ்ந்து வந்தனர். பாண்டியன் பல யாகங்கள் செய்ததால் மகிழ்வுற்ற தேவர் தலைவன், நாடெங்கும் அறம் வளருமாறு மழை பொழிவித்தான். புண்ணிய பூமி கர்ம பூமியென்று புகழப்பெறும் பாரத பூமியிலே வைதிகர் அவைதிகராகிய பல வகை மதத்தவரும் தத்தம் மதங்களைத் தமது வாக்கு வளத்தால் நாடெங்கும் பரப்பி வந்தனர். முத்தமிழ்ப் புலவரும் குமரி முதல் இமயம் வரையில் தம் அரும்பொருளை எத்தகையோரும் வாரிக்கொள்ள ஈந்து வந்தனர். நாடெங்கும் அமைதி பெருகியுள்ள காலத்திலே தான் நூலாராய்ச்சி செய்யவும் மத வாதம் செய்ய வும் இடமுண்டாகும்

பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேத விதிகளைப் பூரணமாய் நம்பிய அரசனாயினும், வேதத்திற்குப் புறம்பாகவுள்ள மதத்தினைக் கைக்கொண்டவர்களை வெறுத்தானல்லன்; வைதிகச் சார்புள்ள மதங்களிலும்-