பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

25

துயரத்திலும் உங்களைத் தவிக்க விட்டு விட்டு நான் பிரிந்து போவது நன்றி கெட்ட செயலாகவே இருக்கும்.

எல்லாவற்றையும் நான் நன்றாக உணர்ந்துள்ளதால், நம் இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாகாது என்றே எண்ணுகிறேன். நாம் இருவரும் அண்ணன், தம்பி மட்டுமன்று. நமது குடும்பத்தை இன்றுவரை தாங்களே நடத்தி வருகிறீர்கள். எங்களுக்கு எல்லாம் எல்லாத் தேவைகளுக்கும் உதவியாக உள்ளீர்கள். அதற்காக, நான் தங்களிடம் அன்பு கொள்ளவில்லை. தம்பியால், வருவாய் வரும் என்பதற்காகத் தாங்களும் என்னிடம் அன்பு வைக்கவில்லை. இவை எல்லாவற்றையும் விட நமது அன்பு மேலானது; உயர்வானது; ஆழமானது. ஒருவர் வழிமாறிச் செல்வதால், அதனால் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், நமது பேரன்புக்கு ஊறு நேராது. மாறாக, அந்த அன்புக்குமுண்டோ அடைக்குந்தாழ்? என்பதே எனது எண்ணமாகும்.

நமது இந்திய நாட்டில் வாழும் முப்பது கோடி மக்களின் நன்மைகளை எண்ணித் தியாகம் செய்யுமாறு தங்களை வேண்டுகின்றேன். கோகலே சங்கத்தில் சேருவதால் நான் பெரிய தியாகம் எதுவும் செய்து விடவில்லை. எந்த நிலையிலும் அந்த நிலைக்கு ஏற்றவாறு நான் வாழப் பழகிவிட்டேன். நன்மையோ, தீமையோ இந்தப் பழக்கம் எனக்கு ஏற்பட்டு விட்டது. எனவே, அதிக அளவு வசதிகளுக்காக நான் ஏற்பாடு எதுவும் செய்யத் தேவையில்லை. சங்கம் கொடுக்கும் சம்பளப் பணமே எனக்குப் போதுமானது. அதுவே முழுத் திருப்தியையும் ஏற்படுத்தும்.

கோகலே சங்கத்தில் சேர்ந்திட எனக்கு நீங்கள் அனுமதி வழங்கினால் அதுவே எனக்குச் செய்த பெரிய தியாகமாகும். நான் அதிகமாகப் பணம் சேர்ப்பேன் என்று நினைக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நமது எதிர்காலத்தைச் சீர்குலைத்துவிடும். நமது குடும்பமே அதனால் குழப்பத்திற்குள்ளாகும்.