பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

29

இலட்சக்கணக்கான ஏழை மக்கள் இரண்டு அல்லது மூன்று ரூபாய் மாத வருமானத்தில் காலம் தள்ளவில்லையா? நம் குடும்பத்தில் நூற்றுக் கணக்கில் வருவாய் வருகிறது. நாம் வசதியாக வாழ முடியாதா? தேசப் பணி என்றால் மனம் திருப்தியுறும் வகையில் உழைக்கலாமே! அமைதியாக நான் நாட்டுப் பணியில் ஈடுபட நினைக்கிறேன். அதனால் வரும் தியாகமும் புகழும் தங்களுக்கே!

கோகலேயின் தலைமையில் நான் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்தால், எனது சொந்த செலவுகளுக்கு தாங்கள் பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. எனது செலவுக்குத் தேவையான ஊதியத்தை அவர்கள் தருவார்கள். குடும்பத்துக்காக சிறிதளவு பணஉதவியைச் செய்வார்கள். சிறு தொகைதான் அது என்றாலும், அதை நான் தங்களுக்கே அனுப்பி வருவேன். முப்பதாயிரத்துக்குப் பதிலாக முப்பது வந்தாலும் மன நிறைவு பெற வேண்டியதுதான்.

கல்விச் செலவுகளுக்காக அந்தச் சங்கம் ஏதோ உதவி செய்கிறது. ஆகவே, பிள்ளைகள் படிப்புச் செலவைப் பற்றித் தாங்கள் வருந்த வேண்டியதில்லை.

அன்புமிக்க அண்ணா, இதுவரை நான் எழுதிய எல்லாவற்றையும் நன்றாகச் சிந்திக்க வேண்டுகிறேன். உடனடியாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இருபது நாட்களாக நான் ஆழ்ந்து சிந்தித்தேன். கெளரவம், பதவி, அந்தஸ்து என்பவை எல்லாம் மாயை. மனிதனுக்குப் பெருமை விளைவிப்பது செல்வம் அல்ல! மனத் திருப்திதான். தங்களுக்கும் அந்தப் பரந்த மனப்பான்மை உண்டு என்பதை நான் அறிவேன்.

நான் கூறும் கருத்தை வேறொரு வகையில் சிந்தித்துப் பார்க்கலாம். நான் திடீரென்று பிளேக் நோய்க்குப் பலியாகி விடுகிறேன். அப்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை வைத்துக்