பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பாபு இராஜேந்திர பிரசாத்

பணியை நடத்தி வந்ததால்தான் இராஜேந்திரர் அமைதியாக நாட்டுப் பணியை மேற்கொள்ள முடிந்தது.

காந்தியடிகள் கஸ்தூரி அம்மையாரை சிறுவயதில் திருமணம் செய்து கொண்டதைப் போலவே, ராஜன் பாபுவும் குழந்தைப் பருவத்திலேயே, அதாவது அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, பன்னிரண்டாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். ராஜன் பாபு மாமியார் இல்லம் அவர் பிறந்த ஜீராதேயீ என்ற ஊருக்கு அருகிலேயே இருந்தது. எப்படி பாபுவுக்குத் திருமணம் நடந்தேறியது என்பதைப் பற்றி அவரே எழுதுகிறார் பாருங்கள்.

“ஜீரோ தேபியில் நடக்க வேண்டிய சடங்குகளை முடித்துக் கொண்டு மண ஊர்வலம் புறப்பட்டது. ஓர் அலங்காரமான பல்லக்கில் நான் உட்கார்ந்து கொண்டேன். அண்ணா குதிரை மீது ஏறி வந்தார். ஆனி மாதம், பல்லக்குக்கு மேலே மூடி இல்லை. அதனால் வெயில் கடுமையாகத் தாக்கியது. அனல் தெறித்தது. வெயிலும், ஆவியும் தாக்க நான் பல்லக்கிலே இருந்தவாறே தவித்தேன். ஒரு வழியாக ஊர்வலம் லட்சியத்தை அடைந்தது. ஆனால், அதற்குள் இரவு வெகுநேரம் ஆனது. எனக்கு இரவில் விரைவில் தூங்கிவிடும் பழக்கமுண்டு. ஆகையால், ஊர்வலம் போய்ச் சேரும் முன்பே நான் பல்லக்கில் தூங்கி விட்டேன்.”

“இரண்டு நாள் அலைச்சல் காரணமாக அயர்ந்த தூக்கம். இடத்தை அடைந்ததும் அண்ணா என்னை எழுப்பினார். வரவேற்புச் சடங்குகள், கல்யாணத்தின் மற்றச் சடங்குகள் நடந்தேறின. எனக்கு மணமாகி விட்டது. ஆனால், அப்போது என்ன சடங்குகள் நடந்தன. அவற்றில் நான் கொண்ட பங்கு என்ன என்பதைப் பற்றி எனக்கு நினைவே இல்லை. குழந்தைப் பருவத்தில் என் சகோதரிகள் பொம்மை ஆட்டங்கள் விளையாடுவார்கள். என் கல்யாணமும் என்னைப் பொறுத்த வரை அவ்வாறுதான் நடந்து முடிந்தது.”