பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

47


காந்தியடிகளிடம் ராஜன்பாபுவுக்கு எத்தகைய அபிமானம் இருந்தது என்பதையே அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். பாபு தனது சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார் :

“சம்பரான் அதிகாரிகள் மகாத்மாவைக் கைது செய்ததைக் கேட்டு ஆண்ட்ரூஸ் வந்தார். காந்தி மீது வழக்கு நடக்கப் போவதில்லை என்று தெரிந்ததும், அவர் திரும்பிப் போக விழைந்தார். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களின் குறைகளைப் போக்க அவர் அங்கு செல்ல விரும்பினார். சம்பரானிலோ, ஐரோப்பியத் தோட்டக்காரர்களின் தொல்லைகள் தீரவில்லை. ஆகையால் அவர் சம்பரானிலே இருந்தால் நலமென்று நாங்கள் எண்ணினோம்.”

மகாத்மாக காந்தி கூறுவது போல் செய்வதாக ஆண்ட்ரூஸ் கூறினார். மாலையில் மகாத்மாவிடம் செய்தியைத் தெரிவித்தோம். அப்போது காந்தியடிகள் கூறிய பதில் எங்களது மனப்போக்கையே மாற்றி விட்டது. அவர் மேலும் கூறும் போது,

“ஐரோப்பியத் தோட்டக்காரர்களுடன் போராட்டம் நடப்பதால், ஐரோப்பியரான ஆண்ட்ரூஸ் நம்மோடு இருப்பது நல்லதென்று எண்ணுகிறீர்கள்.”

இவ்வாறு நாம் வலிமை தேடித் தருவதோ, தேடிக் கொள்வதோ முறை ஆகாது. அவ்வாறு நாம் வலிமை சேர்க்க முனைவதே நமது பலவீனத்துக்கு அறிகுறியாகும். ஆகையால், அவர் உடனே இங்கேயிருந்து போய்விட வேண்டும் என்பதே எனது முடிவு. அதுதான் அவசியம். அப்போதுதான் உங்களது பலவீனம் நீங்கும் என்றார் காந்தியடிகள்.

“பிஜித் தீவுக்கு அவர் போவதை விட சம்பரானில் இருப்பதே நல்லதென்று ஆண்ட்ரூசோ அல்லது நாங்களோ கருதினால், அவர் இங்கேயே இருக்கலாம். முடிவு செய்ய வேண்டியவர் ஆண்ட்ரூஸ்தான்” என்றார் காந்தியண்ணல்.