பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பாபு இராஜேந்திர பிரசாத்


இந்தக் கோரக் காட்சியைக் கண்ட காந்தியடிகள் ‘தீவினைப் பயன்தான் இது’ என்று வருந்தினார். ‘இயற்கையின் சீற்ற லீலைகள்’ என்றார் கவியரசர் தாகூர். அப்போது ராஜன் பாபு காச நோய் கொடுமை காரணமாக பாட்னா மருத்துவமனையிலே சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பூகம்பம் ஏற்பட்ட இரண்டு நாள் கழித்து அவர் மருத்துவ மனையிலே இருந்து ஓரளவு உடல் நலத்தோடு வெளியே வந்தார்.

பீகார் மாகாணம் முழுவதும் அரைகுறை உடல் நலத்தோடு சுற்றிச் சுற்றி வந்து மக்களின் பரிதாப அழிவுகளைக் கண்டு பதறினார் மனம் தடுமாறினார்! தனது உடல்நலனையும் பொருட்படுத்தாமல், பூகம்ப நிவாரண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

பூகம்ப அழிவால் வட பீகார் சின்னாபின்னமானதற்கும், லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல் இழந்து அனாதைகளாக்கப் பட்டதற்கும் எப்படி நிதி திரட்டலாம் என்று அவர் திட்டமிட்டார். வீடிழந்தோர் தங்குவதற்கும், உணவும், ஆடை, மருத்துவ வசதிகளும் கிடைக்க, யார் யாரை அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் சென்று பார்த்து வேண்டிய வசதிகளைத் திரட்டினார்.

பூகம்ப அழிவு விவரங்களைக் கணக்கிட்டு, தேவைகளையும் கணக்கிட்டு, இந்த நேரத்தில் எல்லா நாடுகளும் பீகார் அழிவுகளுக்கு உடனடியாக நிதியுதவி, பொருள் உதவி, தானிய வகைகள் உதவி ஆகியவைகளைச் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் எல்லாவற்றுக்கும் அறிக்கைகளை எழுதி வெளியிட்டார். பத்திரிக்கைகள் அவரது அறிக்கைகளைப் பரபரப்புடன் வெளியிட்டு உதவின. இந்த நிலைகளை எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் மகாசபைக்கும், காந்தியடிகளாருக்கும் நேரிலும், பத்திரிக்கை வாயிலாகவும், கடிதங்கள் மூல்மாகவும் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்தார்.