பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. குடியரசு விழா

இராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்து, மூன்றாண்டு காலமாக அரும்பாடுபட்டு அரசியல் சட்டத்தைத் தயாரித்தவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

இந்த சபை அரசியல் சட்டத்தை தயாரிக்கும் போது, எவ்வளவோ கருத்து வேற்றுமைகள், தகராறுகள் அவரவர் இன சுயநலத் திட்டங்கள், யார் பெரியவர் என்ற மனப்போராட்டங்கள் எல்லாம் எழுந்தன. ஆனால், அவற்றை எல்லாம் ராஜன் பாபு பொறுமையோடும், பொறுப்போடும் அவரவரைச் சரி செய்து, சமரசம் உருவாக்கும் பேராற்றலோடு செயலாற்றிய திறமையால் அரசியல் சட்டமே உருவாகி வெளிவந்தது.

ஆனால், அரசியல் சட்ட உருவாக்கப் பெருமையை இன்று யார் யாரோ கொண்டாடிக் கோலாகல விழா எடுத்துக் கொள்கிறார்கள். அரசியல் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பொறுப்பு டாக்டர் அம்பேத்கருக்கு உண்டு என்றாலும் அதை எல்லோரும் ஏற்கும் வண்ணம் செய்த பெருமை டாக்டர் ராஜன்பாபுவுக்கே உண்டு.

தனது சொந்தக் கருத்து எதற்கும் வளைந்து கொடுக்காமல், மாறுபட்ட கருத்துக்களை அரசியல் நிர்ணய மன்றம் ஏற்குமானால், ஏற்றுவிட்டால், அதை ராஜன் பாபுவும் ஏற்றுக் கொண்டு பொறுமையாகவும், திறமையாகவும், அருமையாகவும் சமாளிக்கும் மனதிடம் கொண்டவராக விளங்கினார்.