பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பாபு இராஜேந்திர பிரசாத்

அவர். அந்த அம்மையாரோடு தில்லி ராஜபவனத்தில் ராஜன்பாபு வசித்து வந்தார்.

அந்த அன்னை, பண்புடைய தாய், அதாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் அருமைத் தமக்கையான படவதிதேவி பெருமாட்டி, 1960 - ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று இரவு திடீரென்று இறந்து விட்டார்.

மறுநாள் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள். ஆண்டுதோறும் இந்திய அரசு மிகக் கோலாகலமாக கொண்டாடி வரும் விழா நாள். மத்திய அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலமும் மிகச் சிறப்பாக இந்த நாளை விழாவெடுத்துக் கொடியேற்றி, ராணுவ மரியாதைகள் ஏற்று மகிழும் நாள் என்பதை பாபு ராஜேந்திர பிரசாத் எண்ணி ஒரு முடிவுக்கு வந்தார்.

தனது தமக்கை இரவிலே இறந்து போன விடயத்தை அரசுக்கு அறிவிக்கவில்லை.நாட்டுக்கும் தெரியப்படுத்தவில்லை. வெளியே தமக்கையின் மரணச் செய்தி தெரிந்துவிட்டால், குடியரசு தினக் கொண்டாட்ட விழாக்களுக்கு இடையூறாக இருக்குமே, விழாவுக்குக் களங்கம் சூழுமே என்று சிந்தித்தார். அதனால் பாபு அதை வெளியிடாமல் மறைத்து வைத்து விட்டார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் என்ற பெருமையோடு முப்படை அணிவகுப்புக்களைப் பார்வையிட்டார். ராணுவ வணக்கத்தை ஏற்றார். தனது நாடு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற திட்டங்களை விழா மேடையிலே பேசி விவரித்தார். விளக்கினார். ஜனகண மன பாடலும் முடிந்தது.

நேராகக் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி வந்தார். தனது தமக்கை படவதிதேவியின் மரணச் செய்தியை வெளியிட்டார்.