பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசியக் கவி

33

அமர்ந்திருந்தபோது அங்கு நேர்ந்த தாக்குதலையும், அதைத் தாம் சமாளித்த விதத்தையும் குடும்ப விளக்கில் குறிப்பாகச் சுட்டுகிறார். கல்கத்தாவில் 1920ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்புக் காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் உருப்பெற்றது. ஆங்கில அரசு வழங்கிய பட்டங்களையும், மரியாதைக்குரிய பதவிகளையும் துறப்பது, கல்விக் கூடங்களையும், நீதிமன்றங்களையும், சட்டமன்றங் களையும் புறக்கணிப்பது, அயல்நாட்டுத் துணிகளை அணியாமல் ஒதுக்குவது போன்ற திட்டங்களின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம் செயற்பட்டது.

ஒத்துழையாமை இயக்கம் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தது. மக்கள் தமது ஆற்றல் எத்தகையது என்பதை முதன் முதலாக உணர்ந்தனர். ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டிப் பாரதிதாசன், 'சுதந்திரன்' என்ற ஏட்டில் எழுச்சிமிக்க கவிதைகள் எழுதினார்.

அடிமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த பாரதத்தைத் தட்டி எழுப்பு வதற்கும், நாடு விடுதலை அடைவதற்கும் பதினெட்டுக் கூறுகள் கொண்ட நிர்மாணத் திட்டம் ஒன்றைக் காந்தியடிகள் மக்கள் முன் வைத்தார். அதன் கொள்கைகள் வகுப்பு ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர், கிராமக் கைத் தொழில் வளர்ச்சி, துப்புரவு, அடிப்படைக் கல்வி, முதியோர் கல்வி, பெண்ணுரிமை, உடல்நலம், தாய்மொழிக்கல்வி, பொருளியற் சமன்மை, தொழிலாளர் மாணவர் பழங்குடி நலன், தொழுநோய்த் தடுப்பு என்பன ஆகும்.

தேசிய இயக்கத்துக்கு துணை புரியும் நோக்கில் பாரதிதாசன் இயற்றி அச்சான நூல்கள் மூன்று.அவை-

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்
தொண்டர் படைப் பாட்டு
கதர் இராட்டினப் பாட்டு

என்பன.

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் பாரதியின் அரையுருவப் படமும்,கருத்து விளக்கப் படங்களும் கொண்டு, நாலனா விலையில் வெளியிடப்பட்டது. நல்ல வர்ண மெட்டுக்களில் தேசிய கீதங்கள்,