பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக்கவி

45

சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
தோகை மயில்வரும் அன்னம் வரும்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக எனும்.

ஆனால் பாரதிதாசன் அவற்றின் வேண்டுகோளையும் மறுத்தார். அவர் நினைவில் துன்பத்தில் துயிலும் தமிழ்மக்களின்காட்சிமட்டுமே தோன்றியது. அவர்கள் துயரைப்பற்றிப் பாட முடிவு செய்தார்.

இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்,
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!

என்று பாடுகிறார். பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர் என்று சொல்ல வேறு என்ன சான்று வேண்டும்? பாரதிதாசன் இயற்கையை வெறுப்பவர் அல்லர். வானையும், நிலவையும், விண்மீன்களையும் அவர் பாடியிருக்கிறார். அவற்றைப் பாடும்போது கூட அவர் சிந்தனை மக்களின் மீதுதான் படிந்திருந்தது. வானத்தில் விண்மீண்களைப் பார்த்தபோது அவைகொப்புளங்களாக அவர் கண்களுக்குத் தோன்றுகின்றன. வானத்தில் ஏன் கொப்புளங்கள் தோன்றின? பகலில் உழைக்கும் மக்கள் இவ்வுலகில் படும் துன்பங்களைப் பார்த்து உள்ளம் வெந்து போனதால், அந்தவானின் உடம்பெல்லாம் கொப்புளங்கள் தோன்றிவிட்டதாம். சமுதாயம் சார்ந்த கற்பனை நம் நெஞ்சை அள்ளுகிறது.

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்; உரிமை கேட்டால்
புண் மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம்; இதைத்தன்
கண்மீதில் பகலிலெல்லாம்
கண்டுகண்டந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி!