பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

இயற்கைக் கவிஞர்

அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்கொடி பச்சைப் பட்டே
குருவிகள் தங்கக் கட்டி!
குளிர்மலர் மணியின் குப்பை!

காமில் சொலபில் என்பவர் செக்நாட்டுத் தமிழறிஞர். பிராகு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது பிரெஞ்சு நாட்டில் உள்ளார். தமிழின் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகத் தம் குழந்தைகளுக்குக் கண்ணகி யென்றும் மாதவியென்றும் பெயர் வைத்தவர்.

இவர் 1962ஆம் ஆண்டுத் துவக்கத்தில் தமிழகம் வந்து தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் நேரில் சந்தித்து உரையாடிவிட்டுச் சென்றார். பாரதிதாசன் குடியிருந்த 10, இராமன் தெரு, தியாகராயர் நகர் இல்லத்துக்கு வந்து அவரைப் பேட்டி கண்டு ஒலிப்பேழையில் பதிவு செய்து கொண்டு சென்றார்.

செக்நாடு சென்ற அவர் பாரதிதாசன் பாடல்களைச் செக் மொழியில் மொழிபெயர்த்து, அந்நாட்டு இலக்கியத் திங்களிதழான 'நோவி ஓரியண்ட்' (Novy/New Orient Monthly) டில் படத்தோடு வெளியிட்டிருந்தார். அவ்விதழை 19.03.1962இல் பாரதிதாசனுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.

காமில் சொலபில் பாரதிதாசனை நேரில் கண்டு உரையாடிய போது, அழகின் சிரிப்பு நூலைப்பற்றி ஒரு சுவையான கருத்தைக் கூறினார். "இந்நூலின் பெயரே ஒரு கவிதை" (The heading itself is a poetry) என்பதே அக்கருத்து, பாரதிதாசன் எழுதிய சிறந்த கவிதைப் படைப்புகளில் இதுவும் ஒன்று.

'அழகின் சிரிப்பு' என்ற பெயரே பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சிறு செய்யுளாகும் என்பது மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் கூற்று.