பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'கூண்டில் கிளி வளர்ப்போரும் குக்கல் வளர்ப்போரும் அவைகளின் விருப்பமறிந்து வேண்டியதைக் கொடுப்பர். ஆனால் கணவனை இழந்த பெண்ணுக்கு எது தேவையென்று யாரும் நினைப்பதில்லை' என்று வருந்துகிறார் கவிஞர்.

இளமைத் திருமணத்தால் ஏற்படும் கொடுமையை ஒரு தாய் வாயிலாக உள்ளம் உருகச் சித்தரிக்கிறார்.

கண்களோமருகனும் மகளும் கனிந்து
காதல் விளைப்பதைக் காண ஓடின
வாயின் கடைசியில் எச்சில் வழியக்
குறட்டை விட்டுக், கண்கள் குழிந்து
நரைத்தலை சோர்ந்து நல்லுடல் எலும்பாய்ச்
சொந்த மருகக் கிழவன் தூங்கினான்!
இளமை ததும்ப, எழிலும் ததும்பக்
காதல் ததும்பக் கண்ணிர்ததும்பி
என்மகள் கிழவன் அருகில் இருந்தாள்!

கைம்மை நிலையைப் பற்றிக் குறிப்பிட வந்த கவிஞர்,

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே -இங்கு
வேரில் பழுத்த பலா -மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே -குளிர்
வடிகின்ற வட்டநிலா.

என்று பாடுகிறார். இரக்கமற்ற ஆண்கள் சமுதாயத்தைப் பார்த்து,

காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே -கெட்ட
கைம்மையைத் துர்க்காதீர் -ஒரு
கட்டழகன் திருத்தோளினைச் -சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்

என்று அறிவுரை கூறுகின்றார்.


வீட்டில் அடைபட்டிருக்கும் பெண்டிர் நிலையை விளக்கவந்த பாரதிதாசன்