பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்குப் பாரதிதாசன் தமிழ் இலக்கிய சரிதையில் கவி பாரதியுடன் புது யுகம் பிறக்கிறது. தமிழுக்கு மறுமலர்ச்சி தந்தவர் பாரதி. அவருக்குப் பிறகு மொழிக்குப் புது வனப்பும் மணமும் அளித்துத் தமிழை வள முள்ளதாக்கி வாழ்வோர் பலர். பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களில் தலை சிறந்தவர் கவி பாரதிதாசன். கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் கவிதைக்கனல் தனி ஒளியுடன் பிரகாசிக்கிறது. அவரது கவிதைகளில் புதுமை இருக்கிறது. அழகு இருக்கிறது. இனிமை இருக்கிறது. சோர்ந்து கிடக்கும் சமுதாயத்துக்குப் புத்துயிர் ஊட்டும் உணர்ச்சி நிறைந்திருக்கிறது. புதுயுக வாழ்வுக்குத் துணைபுரியும் கருத்துக்கள் ஏராளமாக உ ள் ள ன. இவற்றுக்கெல்லாம் மேலாக, கவிஞரின் சிருஷ்டிகளில் உவமைகள் தனி நயத்துடன் மிளிர்கின்றன. வாழ்வின் உண்மைகளை அழகாக எடுத்துக் காட்டுவது கவிதை, கவிதைக்கு அழகும் உயிர்ப் பும் தருவன சொற்களில் இழைந்து காணும் உணர்ச்சியும் கருத்துக்களும். இவற்றுடன் சிறப்புத் தருவது கற்பனை. கற்பனையின் அழகான இசைவு உவமை. உவமைகள் கவிதைக்கு உயர்வு அளிப்பதுடன், கவிஞனின் உளப்பாங்கையும் கற்பனைப் பெருக்கையும் சுட்டிக்காட்டுகின்றன.