பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


“.............ஒருபதி னாயிரம்

சனிவாய்ப் பட்டும், தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்”

-என்பதன் வாயிலாகத் தன் உள்ளக்கிடக்கையை அறிவித்ததோடு தமிழச் சாதியின்மேல் தனக்கிருக்கும் பெருங்கவனத்தையும் புலப்படுத்தியுள்ளார்.

இலக்கியத்தின் இத்தகைய வல்லமையை அறியாதார் பலர்; நம்பாதார் பலர். அன்னார் ‘இலக்கியம் ஒரு பொழுது போக்குத் துணைக்கருவி; புலவர்களது பிழைப்பு மூட்டை’ என்றனர். இவ்வாறு ஓர் எண்ணம் முளைத்த நாள் முதலே இலக்கியப் பயிற்சி குறைந்தது. குறையவே தமிழர் தம் வாழ்வின் நெறி பிறழ்ந்தது. சோலை சூழ்ந்து, தண்ணென்னும் நன்னீர் நிறைந்து தாமரை மலர்ந்து மணங் கமழ, வண்டிசைத்து வண்ணம் பொழியும் நீர்க்குளமாய் இலங்க வேண்டிய தமிழச் சாதி நோய்க்களம் ஆனது.

இதனை ஓர்ந்து உணர்ந்த பாரதி தமிழ்ச் சாதிக்காகக் கவன்றார். ‘இஃதும் விதியின் விளையாட்டோ’ என்று வெதும்பினார். விதியை விளித்து ஓலமிட்டார்:

“ நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயனீர் இலதாய்
நோய்க்கன மாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செய நினைத்தாய்? எனக்குரை யாயோ? ”

12