பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 89

பிண்டமாகத்தான் இருத்தல் கூடும். அறிவின் துணை கொண்டு ஆயத் தொடங்கினால் அங்கே கவிதை தோன்றுவதில்லை. உணர்ச்சியில் மூழ்கி அனுபவித்து, அந்த அனுபவத்தைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற கருத்துடன் உணர்ச்சிப் பெருக்குடையோன் தன் உணர்ச்சிக்குச் சொல்லின் மூலம் கொடுக்கும் வடிவமே கவிதை எனப்படும். எனவே, கவிதை என்பதே கவிஞருடைய உணர்ச்சியைச் சொற்களின் மூலம் நமக்குத் தருகின்ற ஒரு கருவி என்பது பெறப் படும். உணர்ச்சியில் பிறந்து, உணர்ச்சியில் வளர்ந்து, உணர்ச்சி வடிவாகவே வெளிவரும் கவிதை, கற்போர் மனத்தில் உணர்ச்சியையே ஊட்டும் என்பதில் தடை ஒன்றுமில்லை.

ஒரு கவிதை எவ்வளவு தூரம் கற்பவர் மனத்தில் உணர்ச்சியை ஊட்டும் என்பதற்கு அந்தக் கவிஞனுடைய உணர்ச்சியின் ஆழமும் அந்த உணர்ச்சி ஆழத்தை வெளியிட அவன் பயன்படுத்தும் சொல் ஆற்றலுமே சிறப்பான காரணங்கள் ஆகும். சாதாரண நிகழ்ச்சிகளைக்கூடக் கவிஞன் காண்கின்ற முறையே வேறு. நம் போன்றவர்கள் ஒரு நிகழ்ச்சியில் எவ்வளவு ஈடுபட்டாலும், "நாம் என்ற முனைப்பை யும் ஈடுபடுகிறோம்’ என்ற நினைவையும் மறப்ப தில்லை. ஆனால், கவிஞன் ஈடுபடும்போது அவன் தன்னை மறந்து உணர்ச்சியில் ஈடுபட்டுத் தான் வேறு அது வேறாக நில்லாமல், தானே அதுவாய் ஓர் அத்துவித நிலையை அடைந்து விடுகிறான். பின்னர் அதிலிருந்து வெளிப்பட்டு அந்த அனுபவத்தை மறுபடி யும் சிந்தித்துப் பார்த்து சொற்களின் உதவி கொண்டு அனுபவத்தை வடிக்கத் தொடங்குகிறான்.