சு. சமுத்திரம் 31
போகுற வழியிலேயே குறைப் பிரசவமானது தெரியாதா? ஒம்ம மகள்கள் - மருமகள்கள் மாதிரி - தென்காசி நர்ஸிங் ஹோமுல பிரசவிக்க முடியாத ஏழை பாளைகளுக்காக வருகிற பிரசவ ஆஸ்பத்திரி மாமா".
ராமசுப்பு காதில் வாங்காதது மாதிரி ஒரு மூங்கில் தட்டியை எடுத்து, சணல் கயிறால், கொட்டகை கம்புச் சரத்தில் கட்டினார். ‘வெயில் வரப் போவுது சீக்கிரமாய் முடியுங்களேப்பா' என்று வேலையாட்களை விரட்டினார். இதற்குள், கலைவாணியின் வருங்கால மாமனார் தவசிமுத்து, அந்தப் பக்கமாய் வந்தார். நடந்ததை யூகித்துக் கொண்டு, ‘இந்தா பாருப்பா... சுப்பு... நீ செய்யுறது ஒனக்கு நல்லா இருக்குதா' என்று கேட்டார். உடனே ராமசுப்பு, தவசிமுத்தைப் பார்க்காமலே, பச்சை தென்னை ஒலைகளை அடுக்கியபடியே ‘இது ஒரு காலத்துல களத்து மேடாய் இருந்தது. ஒனக்கு தெரியாதா? இதுல நீயும் களம் போடலாம்... மாடு கட்டலாம். அவ்வளவு ஏன்... இந்த கொட்டகை போட ஐநூறு ரூபாய் ஆகும். பாதி ரூபாய் கொடுத்துட்டு இந்த கொட்டகையில் பாதியை எடுத்துக்க. நான் வேண்டாங்கல’ என்றார்.
தவசிமுத்துவுக்கு, குற்றாலத்தில் குளித்தது போலிருந்தது. இங்கேயே ஒரு கட்டிலைப் போட்டு, ஒரு தென்னந்தட்டிக் கதவையும் வைத்து தூங்கினால்... அடேயப்பா எப்படி காத்து வரும்? பக்கத்து வாழைத் தோப்பும் வாய்க்கு உதவும்.
தவசிமுத்து, தான் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போல், சொன்னார். மருமகளாய் ஆகப் போகிற கலைவாணியிடம், வாழைப்பழ ஊசியாய் பேசினார்.
"ராமசுப்பு சொல்றதுல ஒரு முழு நியாயம் இல்லாவிட்டாலும், முக்கால் நியாயம் இருக்குது. நாளைக்கு நீங்க ஆஸ்பத்திரி கட்டி, இவனோ இல்ல எவனோ கோர்ட்டுக்குப் போய் கட்டுனதை இடிக்கப்படாது பாரு...ஆற அமர யோசிப்போம்”.
ஆனந்தி, அழாக் குறையாய் வாதிட்டாள்.
"என்ன தாத்தா இப்படிப் பேசுறீங்க? அந்த வெளிநாட்டம்மா சரியா ஆறு மணிக்கு வரப் போறாங்க. நேத்தே இவரு இப்படி அட்டுழியம் செய்திருந்தால், அவங்க கையிலே காதுல விழுந்து, நிகழ்ச்சிய தள்ளி வச்சிருப்போம். இங்கே வாரவங்களுக்கு என்ன பதில் சொல்ல...?"
"ஊர்மானம் பறக்கும் தாத்தா"
"எப்படி பறக்கும்.... கல்லுதானே நடணும். அதோ அந்த செளக்கு