முகவுரை
xi
“தெய்வப் புலமைத் திருவள்ளு வர்குறளில்
உய்விக்கு நூலெல்லா முள்ளதெனச் - செய்வித்தான்
தத்துவமெல் லாமுடம்பிற் றந்துணர்வார் போலுலக
மொத்தபரி மேலழகன் ஓர்ந்து.”
(மேற்படி1546)
“விரைத்தா ரலங்கல் திருவள்ளு வர்முன்னம் வெண்குறட்பா
நிரைத்தார் மிகுபொருள் நான்கும் விளங்க நெறிப்புலவர்
உரைத்தார் பலரும் அதற்குரை தன்னை யுலகறியக்
கருத்தான் வகுத்தமைத் தான்கலை தேர்ஒக்கை காவலனே.”
(மேற்படி1547)
“வள்ளல் சிலைப்பெரு மாள்நச்சர் சாத்தர் வழுதிமுதல்
தள்ளுவ னார்க்குந் தலையான பேரையும் தன்னுரையை
விள்ளுவ னார்க்குந் திருக்காஞ்சி வாழ்பரி மேலழகன்
வள்ளுவ னார்க்கு வழிகாட்டி னான்றொண்டை மண்டலமே.”
(தொ.ம.சத.41)
இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவையுட்பட அந் நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும். இன்னும் பரிமேலழக ருரையே தலைசிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப் படாத தெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனை யுரைகளெல்லாவற்றினுஞ் சிறந்த தென்பதும். சில குறள்கட்கு ஏனை யுரையாசிரியர் காணமுடியாத உண்மைப்பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே, ஆயின், பெறுதற்கரிய அறுசுவை யரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துகளை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தியிருப்பது, இவ் வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது. இனி, சில குறள்கட்கு முழுத் தவறாகவும் சில குறள்கட்கு அரைத் தவறாகவும் பொருள் கூறியுள்ளார். சில தென்சொற்களை வடசொல்லாகக் காட்டியிருப்பதுடன், சில சொற்கட்குத் தவறான இலக்கணவமைதியுங் கூறியுள்ளார்.
பரிமேலழகர் வழுவியுள்ள வழிகள்
1. ஆரிய வழிகாட்டல்
எ-டு: “தத்துவ மிருபத்தைந்தினையுந் தெரிதலாவது... சாங்கிய நூலு ளோதியவாற்றான் ஆராய்தல்” (27ஆம் குறளுரை).