இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
110
திருக்குறள்
தமிழ் மரபுரை
(இ-ரை.)அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல:ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு இல்லை. உயர்வு உயர்குலத்தானாதல்.
136. ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.
(இ-ரை.) இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - ஒழுக்கக் கேட்டால் தமக்குக் குலவிழிபாகிய கேடுண்டாவதை யறிந்து; உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் - அறிவுடையோர் ஒழுக்கத்தின் தளரார்.
'பாக்கு' ஒரு தொழிற்பெயரீறு.
137. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி.
(இ-ரை.) ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர்; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - அவ் வொழுக்கத்தினின்று தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர்.
ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின், அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின், 'எய்தாப் பழி' எய்துவர் என்றார்.
138. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
(இ-ரை.) நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந் தரும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயொழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.
மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால், 'வித்தாகும்' என்றார். தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால், நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந் தருதல் பெற்றாம்.