பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/171

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - புகழ்

149




(இ-ரை.) உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்பவர் சொல்வதெல்லாம்: இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே.

உரைத்தல் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இருவடிவிலும் நிகழுமாதலின், இங்கு உரைத்தலென்பது அவ் விருவடிவிற்கும் பொதுவாம். மேற்குறளிற் குறிப்பாகச் சொன்ன ஈதல்வகை இங்கு வெளிப்படையாகக் கூறப்பட்டது.

233. ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

(இ-ரை.) ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையில்லாத வாறு உயர்ந்த புகழல்லாமல்; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல் - இவ் வுலகத்து அழியாது நிற்பது வேறொன்றும் இல்லை.

ஓர் உயிரைக் காத்தற்கு உணவும் பொருளும் மட்டுமன்றி உறுப்பும் உடம்பும் உதவ நேருமாதலின், இணையின்றி 'யுயர்ந்த புகழ்' என்றார். ஒன்றா என்பது ஒன்றாக என்பதன் ஈறு தொகல்.

234. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

(இ-ரை.) நிலவரை நீள்புகழ் ஆற்றின் - ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின்; புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - தேவருலகம் அவனையன்றி அறிவால்மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது. இக் கொள்கையை,

"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
யருள வல்லை யாகுமதி யருளிலர்