பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

திருக்குறள்

தமிழ் மரபுரை


அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அது பெறாவழியெழுஞ் சினமும் என வடநூலார் கூறும் குற்றம் ஐந்தனுள், அகப்பற்றை அறியாமைக்கண்ணும் அவாவை ஆசைக்கண்ணும் திருவள்ளுவர் அடக்கிக் காமவெகுளி மயக்க மென மூன்றாகக்கூறியதாகப் பரிமேலழகர் உரைப்பர். இது பாட்டிக்கு நூல் நூற்கப் பேர்த்தி கற்றுக் கொடுத்தாள் என்பது போன்றதே. வேள்வியொன்றேயியற்றும் ஆரியர் ஓகமுறை கற்றது தமிழரிடத்திலேயேயாதலின், தமிழ்நூலார் கூறும் முக்குற்றங்களையே வடநூலார் ஐந்தாக விரித்தார். என அறிக. வீடு பெறுவானின் முழுத் தூய்மையைக் குறிக்க 'மூன்றன் நாமங்கெட' என்றார். நாமமும் என்னும் இழிவுசிறப்பும்மை தொக்கது. 'நோய்' என்பது வகுப்பொருமை.

'நாமம்' என்பது அச்சம் என்று பொருள்படின் தென்சொல்லும், பெயர் என்று பொருள்படின் வடசொல்லும் ஆகும். பெயர்ப்பொருள் குறிக்கவும் இங்கு வடசொல்லை யாளத் தேவையில்லை. அக்காலத்தில் மொழியாராய்ச்சியும் தென்மொழி வடமொழிப் போராட்டமும் இன்மையால், திருவள்ளுவர் தம் கருத்தைத் தமிழொழுக்கத்தின் சிறப்பை நிலைநாட்டுவதிற் செலுத்தினாரேயன்றி மொழித்தூய்மை போற்றுவதிற் செலுத்தவில்லை. மேலும், அக்காலத்தில் தமிழர் அயிர்க்குமளவு வடசொற்கள் தமிழிற் பெருவாரியாகக் கலக்கவில்லை. ஒருசில சொற்களே கலந்திருந்ததால் அவை தமிழறிஞர் கண்ணைக் கவர்ந்தில. அல்லாக்கால்,

காமம் வெகுளி மயக்க மிவற்றின்பேர்
தாமுங் கெடக்கெடு நோய்

என்றே திருவள்ளுவர் யாத்திருப்பார்.

அதி. 37 - அவாவறுத்தல்

அதாவது,

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை" (345)

என்பதற்கேற்ப, காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்தார்க்கும் பூதவுடம்பு நிற்கும்வரை முன் துறக்கப்பட்ட புலன்கள்மேற் பயிற்சிவயத்தால் ஒரோவழி நினைவு செல்லுதற்கு இடமிருத்தலால், அங்ஙனம் நேராவாறு பூதவுடம்பு